Saturday, April 30, 2011

ரிவர்ஸ் கியரில் போகிறது தமிழ்நாடு

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=233813

வளர்ச்சித் துறைகளில் தமிழகம், மற்ற மாநிலங்களுக்கு ஒரு முன்னோடியாக இருந்து வந்துள்ளது. தொழில், விவசாயம் மற்றும் சேவைத் துறைகளில், தமிழகத்தின் வளர்ச்சி அதிகரித்து, மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக இருந்தது. காமராஜர் மற்றும் பக்தவத்சலம் முதல்வர்களாக இருந்த, 1950, 1960ம் ஆண்டுகளில், சி.சுப்ரமணியம் மற்றும் ரா.வெங்கடராமன் ஆகியோரின் சீரிய முயற்சியால், பல துறைகளில் இந்த மாநிலம் அதிவேக வளர்ச்சி பெற்றது. கடந்த, 1967ம் ஆண்டு தொடங்கிய திராவிடக் கட்சிகளின் ஆட்சியில், பொருளாதார வளர்ச்சிக்குக் கொடுத்த முக்கியத்துவம், வெகுவாகக் குறைந்து, அரசின் பெருவாரியான வருமானம், மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கு மட்டுமின்றி, விலை உயர்ந்த ஆடம்பரப் பொருட்களை இலவசமாக அளிப்பதில் செலவிடப்பட்டு வருகிறது.

வசதியற்ற, மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு இலவசங்களை அள்ளித் தருவதில், மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால், வசதி படைத்தவர்கள் உள்ளிட்ட தமிழகத்தின், ஏழு கோடிக்கும் அதிகமான எல்லாத்தர மக்களுக்கும், இத்தகைய சலுகைகளை அளிப்பதன் மூலம், அரசின் மூலதனம் வீணாகிறது. இரண்டாவதாக, இத்தகைய மானியங்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்டு ஊழல் மலிகிறது. உதாரணமாக, தி.மு.க., அரசின், ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசித் திட்டம். தமிழகத்தின் கணிசமான பகுதியினர், இந்த அரிசியை வாங்குவதில்லை. ஆனால், இத்தகைய அரிசி, எல்லா குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படுவதாக கணக்குக்காட்டி, அந்த அரிசி, கள்ள மார்க்கெட்டில் விற்கப்படுவதாக பரவலாக நம்பப்படுகிறது. ஒரு கோடியே, 60 லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு, இலவச கலர் "டிவி' பெட்டிகள் அளிக்கப்பட்டன. இது, கிட்டத்தட்ட தமிழகத்தில் உள்ள மொத்த குடும்ப அட்டைதாரர்களின் எண்ணிக்கை. இவர்கள் அனைவரும், மிக வறுமை நிலையில் உள்ளவர்களா அல்லது அனைவருக்கும் இலவசமாக, "டிவி' பெட்டிகள் தேவையா? இவற்றில் கணிசமான பகுதியினருக்கு, மின்சார வசதிக்கூட கிடையாது. இந்த, "டிவி' பெட்டியை இவர்கள் பெற்று என்ன செய்வர்? இதே முறையில், அரவை இயந்திரம், மிக்சி, மின் விசிறி போன்றவற்றையும் இலவசமாக அளிப்பதாக, திராவிடக் கட்சிகள், தங்கள் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளன. இது பகுத்தறிவிற்கும், அரசியல் சாசனத்திற்கும் ஒவ்வாதது.

இந்த வழிமுறை, பரவலாக ஊழல் செய்வதற்கு வகை செய்கிறது. தேவையற்றவர்களுக்கும், இத்தகைய சாதனங்கள் கொடுத்ததாகக் கணக்கு காட்டப்படும். இலவச, "டிவி' பெட்டிகள் அளிப்பதற்கு, அரசுக்கு, 4,000 கோடி ரூபாய்க்கு மேல் செலவு. இந்த தொகையில், 1,000 மெகாவாட் மின் உற்பத்தி நிலையம் ஒன்று அமைக்கலாம். மின்பற்றாக்குறையால் அவதிப்படும் மக்களுக்கு, இந்த, 1,000 மெகாவாட் உற்பத்தி நீண்டகாலம் பலனை அளிக்கும். உலகெங்கிலும் மானிங்கள், வறுமைக்கோட்டிற்குக் கீழேயுள்ள மக்களுக்கும், செலவு செய்யக்கூடிய நிலையில் இல்லாத மக்களுக்கும், அத்தியாவசியத் தேவைப் பொருட்கள் கிடைப்பதற்கு வழிவகை செய்வதற்காக அளிக்கப்படுபவை. அரசியல் கட்சிகள், ஓட்டுகளைப் பெறுவதற்காக, இத்தகைய ஆடம்பரப் பொருட்களை இலவசமாக அளிப்பது வருந்தத்தக்கது.

கடந்த, 1989ம் ஆண்டு, விவசாயத்திற்கு இலவச மின்சாரம் அளிக்கும் திட்டம், தி.மு.க., அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த கால கட்டத்தில், அரசுக்கு இதனால், ஆண்டுக்கு, 200 கோடி ரூபாய் செலவு. இந்த, 20 ஆண்டுகளில் இது, 20 மடங்காக அதிகரித்துள்ளது. இதனால், தண்ணீர் பற்றாக்குறை உள்ள தமிழ் மாநிலத்தில், நிலத்தடி நீர் பெருமளவில் இறைக்கப்பட்டு விரயமாகிறது. உபயோகிக்கப்படும் தண்ணீரில், 75 சதவீதத்திற்கும் மேல், விவசாய உற்பத்திக்கு செலவிடப்படுகிறது. இதில் பெரும் பகுதி வீணாக்கப்படுகிறது. வங்கதேசத்தில், இத்தகைய கட்டுப்பாடின்றி நீரை இறைத்ததன் மூலம், "ஆர்சனிக்' என்ற ரசாயனப் பொருள், நிலத்தடி நீருடன் கலந்து, கொடிய விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. சரி... இத்தகைய இலவச மின்சாரத்தின் மூலம், தமிழகத்தில் உணவு உற்பத்தி பெருகி உள்ளதா என்றால், இல்லை. கடந்த பல ஆண்டுகளில், உணவு உற்பத்தியில் தமிழகம், பின்னடைந்து வருகிறது. பசுமைப் புரட்சி ஆரம்பித்த காலகட்டத்தில், அதாவது, 1966-68ம் ஆண்டுகளில், தமிழகத்தின் உணவு உற்பத்தி, 59 லட்சம் டன். பஞ்சாப் மாநிலத்தில், இது, 41 லட்சம் டன்களாக இருந்தது. 40 ஆண்டுகளுக்கு பிறகு, 2009-10ம் ஆண்டில், பஞ்சாப் மாநிலத்தின் உணவு உற்பத்தி, 273 லட்சம் டன்கள். அதாவது, 6.5 மடங்குக்கும் அதிகம். தமிழகத்தில் இது, 80 லட்சம் டன்களாக மட்டுமே உயர்ந்துள்ளது. அதாவது, மூன்றில் ஒரு பங்கு, ஆண்டின் சராசரி உணவு உற்பத்தி 1 சதவீதத்திற்கும் குறைவு என்ற அளவில் அதிகரித்துள்ளது. இது, மக்கள் பெருக்கத்தின் உயர்வை விடக் குறைவு. இந்த, 40 ஆண்டுகளில், மாநிலத்தின் மொத்த வருமானத்தில், விவசாயத்தின் பங்கு வெகுவாகக் குறைந்து, இன்று 13-14 சதவீதமாக உள்ளது. ஆனால், விவசாயத்தை நம்பி வாழும் மக்கள், இன்னும் மொத்த மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகம். ஆகவே தான், பலவகையான இலவசத் திட்டங்கள் அளித்தாலும், விவசாயத்தை நம்பி கிராமப்புறங்களில் வாழும் பெருவாரியான மக்களுக்கு, பொருளாதார வளர்ச்சியால் பயன் கிட்டவில்லை. அரசு அலுவலர்கள், பெரிய தொழில் மற்றும் சேவை நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், வியாபாரிகள் போன்றவர்கள் மட்டுமே, 9 சதவீத பொருளாதார வளர்ச்சியால் பயனடைந்து வருகின்றனர்.

அரசு அடிப்படை கட்டுமான வசதிகளைப் பெருக்குவதில், சிறப்புக் கவனம் செலுத்தினால், தனி மனிதனின் உற்பத்தி திறனும், வருமானமும் பெருகும். வறுமை வெகுவாகக் குறைந்து, மானியங்களின் தேவை குறைந்துவிடும். இதற்கு அரசியல் கட்சிகள், அடுத்த, 10-20 ஆண்டுகளில், வளர்ச்சித் திட்டங்களில் தனிக்கவனம் செலுத்த வேண்டும். ஆனால், தமிழகத்தில் அரசியல் கட்சிகள், மிகக்குறுகிய கண்ணோட்டத்துடன், தேர்தல் நேரங்களில் இலவச வாக்குறுதிகளை அள்ளி வீசுகின்றன. அடிப்படை கட்டமைப்பு வசதிகளைப் பெருக்க, நீண்டகால திட்டங்களைத் தீட்டுவதில் கவனம் செலுத்துவதில்லை. கடந்த, 15 ஆண்டுகளுக்கு முன், ஆந்திர மாநிலம், தமிழகத்தை விட மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தது. அரசின் ஆண்டு வரி வருமானமும், திட்டச் செலவினங்களும், தமிழகத்தை விட, குறைவாக இருந்தன. இன்று, இது வெகு வேகமாக அதிகரித்து, மிக அதிகளவில் உள்ளது. நடப்பாண்டு, 2011-12 ஆண்டு நிதிநிலை அறிக்கையின்படி, ஆந்திர மாநிலத்தின் வருவாய், 1 லட்சத்து, 995 கோடி ரூபாய். தமிழகத்தின் வருவாய், 79 ஆயிரத்து, 413 கோடி ரூபாய். இதேபோன்று திட்ட செலவினங்கள், ஆந்திர மாநிலத்தில், 47 ஆயிரத்து, 558 கோடி ரூபாய்; தமிழகத்தில் இது, 22 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே.

நிதி திட்டங்களுக்கும், மற்ற முக்கியமான செலவினங்களுக்கும், தமிழகத்தில் நிதி ஒதுக்கீடு மிகவும் குறைவு. ஏனெனில், திரட்டப்படும் நிதியில் பெருமளவு, அரசு ஊழியர்கள் சம்பளம், பென்ஷன், மானியம் மற்றும் பலவகை இலவசங்களுக்காக செலவிடப்படுகிறது; வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படுவது மிகக் குறைந்துள்ளது. ஆண்டுக்கு, 4,000 கோடி ரூபாய், இலவச மின்சார திட்டத்தின் மூலம், அரசும், தமிழ்நாடு மின்சார வாரியமும் செலவழித்து வருகின்றன. இந்த தொகையை கொண்டு, 1,000 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட ஒரு மின் நிலையத்தை, ஆண்டுதோறும் நிறுவ முடியும். அதாவது, ஐந்து ஆண்டுகளில் மட்டும், 5,000 மெகாவாட் திறன் கொண்ட மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்க முடியும். ஆனால், 1992ல் தொடங்கி, 2007ம் ஆண்டுவரை, மூன்று ஐந்தாண்டு திட்டங்களில், தமிழகத்தில் மிகச் சொற்ப அளவிலேயே மின் உற்பத்தி திறன் அதிகரிக்கப்பட்டது. இதன் விளைவு தான், இன்று நிலவும் மாநிலம் தழுவிய மின்பற்றாக்குறை. அடிப்படை வசதிகள் செய்து தர, அரசின் நிதி நிலையில் இடம் இல்லை. செய்யும் சில வளர்ச்சித் திட்டங்கள் கூட, அதிகளவில் கடன் பெற்றுத்தான் செயல்படுத்தப்படுகின்றன. அரசின் கடன் சுமை, ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகம். இதை சரிசெய்ய அரசு, சீரிய முயற்சி செய்யவில்லை. கடந்த, 2005-10ம் ஆண்டுகளில், தமிழகத்தின் வளர்ச்சி விகிதம் ஆண்டுக்கு, 7.4 சதவீதம். இது, அகில இந்தியாவின் சராசரி வளர்ச்சி விகிதத்தை விட, 8.7 சதவீதம் குறைவு. குஜராத் 11.3, அரியானா 11, பீகார் 9.6, கர்நாடகம் 8.5, கேரளா 8.1, உத்திரகாண்ட் 7.8 என்ற அளவில் வளர்ச்சி விகிதம் உள்ளது. மேற்கண்ட மாநிலங்களின் வளர்ச்சி விகிதத்தை விட, தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி விகிதம் குறைவு. இலவசத் திட்டங்கள் இதே கதியில் தொடர்ந்தால், அடுத்து வரும் ஐந்தாண்டுகளின் வளர்ச்சி, இன்னும் சரிந்து, தமிழகம் ஒரு பின் தங்கிய மாநிலமாக ஆகக்கூடும். email:indecom@airtelmail.in

Tuesday, April 12, 2011

எரிகிற வீட்டில் பிடுங்கின வரை லாபம்?


This came in dinamalar article comments
கலைஞர் டிவி க்கு தமிழக அரசு பணம் கொடுக்கப்படும் விகிதம் - 10 விநாடிக்கு ரூ.9700/- சன் டிவி க்கு – ரூ.23,474- தமிழக அரசு சம்பந்தப்பட்ட பல விளம்பரங்கள் கலைஞர் தொலைக்காட்சியில் வருவதைக் காண்கிறோம்.
சில விளம்பரங்கள் 3-4 நிமிடங்கள் அளவிற்கு கூடப் போகின்றன. இவை எல்லாம் சமூக நலன் கருதி வெளியிடப்படும் இலவச அரசு விளம்பரங்கள் என்றே பலரும் எண்ணி வந்தனர். அண்மைக் காலங்களில் அடிக்கடி வெளியிடப்படும் குடிசை வீடுகளை கான்க்ரீட் வீடுகளாக மாற்றும் திட்டத்தின் விளம்பரங்களில் கலைஞரும், ஸ்டாலினும் பல நிமிடங்களுக்கு தொடர்ந்து காட்சி அளிக்கிறார்கள். அவர்களுக்கு புகழ்மாலைகள் சூட்டப்படுகின்றன. அரசு செலவில் இப்படி முதல்வரும், துணைமுதல்வரும் தற்புகழ்ச்சி செய்து கொள்வதே அருவருப்பாக இருக்கிறது. இத்தகைய விளம்பரங்களை திமுக தன் கட்சி செலவில் தயாரித்து வெளியிட்டால் யாரும் கேட்கப்போவதில்லை. அரசு செலவில் இத்தகைய விளம்பரங்கள் தயாரிக்கப்படுவதே அருவருப்பாக இருக்கிற நேரத்தில், இவை தொலைக்காட்சி நிறுவனத்திற்கு தமிழக அரசால் காசு வேறு கொடுத்து ஒளிபரப்பப்படுகின்றன என்கிற செய்தி அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது. 

இது குறித்து செய்தி ஒன்று – சென்னை குரோம்பேட்டையில் உள்ள மக்கள் விழிப்புணர்வு சங்கத்தின் தலைவர் வி.சந்தானம், தகவல் அறியும் உரிமை சட்டத்தில் டிசம்பர் 30-ம் தேதி இ.எம்.ஆர்.ஐ.தலைமைச் செயல் இயக்குநரிடம் இருந்து பெற்ற கேள்வி- பதில்களின் விவரம் இன்று வெளியாகி இருக்கிறது. 

கேள்வி:— 108 ஆம்புலன்ஸ் சேவை சம்பந்தமான விளம்பரங்கள் சன் மற்றும் கலைஞர் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படுகின்றன. இது இலவச விளம்பரமா? அல்லது கட்டண விளம்பரமா? கட்டணமென்றால் ஒரு முறை விளம்பரத்துக்கு எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும்? 
பதில்:— 108 ஆம்புலன்ஸ் சம்பந்தமான விளம்பரம் இலவச விளம்பரம் அல்ல. கட்டண விளம்பரம்தான். ஒரு முறை பத்து விநாடிகள் விளம்பரத்துக்கு சன் டிவியில் ரூ.23,474-ம், கலைஞர் டிவியில் ரூ.9,700-ம் செலுத்த வேண்டும் 

சன் தொலைக்காட்சியின் உரிமையாளர்கள் - முதல்வரின் பேரன், அவர் மனைவி மற்றும் அவரது குடும்பத்து உறுப்பினர்கள். கலைஞர் தொலைக்காட்சியின் பங்குதாரர்களில் - முதல்வரின் மகளும், சில அமைச்சர்கள் குடும்பத்தினரும் அடங்குவர். அரசாங்க விளம்பரங்கள் எந்த அடிப்படையில் இந்த தொலைக்காட்சிகளுக்கு கொடுக்கக்ப்படுகின்றன ? சன் தொலைக்காட்சி அதிகம் பேரால் பார்க்கப்படுவதால் விளம்பரத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டதாகச் சொல்லலாம். சரி - கலைஞர் தொலைக்காட்சியை எவ்வளவு பேர் பார்க்கிறார்கள் ? அதற்கு எப்படி அரசு விளம்பரத்தைக் கொடுத்தார்கள் ? 
இதில் விநோதம் என்னவென்றால் - அரசு தொலைக்காட்சியான பொதிகையில் இத்தகைய அரசு விளம்பரங்கள் வெளியாவதே இல்லை ! (அங்கு காசு கொடுத்தால் அது தன் குடும்பத்திற்கு எப்படி போகும் ?) 
அரசாங்க பணத்தில் முதல்வர் குடும்பத்து தொலைக்காட்சிகளுக்கு விளம்பரம் கொடுப்பது அதிகார துஷ்பிரயோகம் இல்லையா ? எரிகிற வீட்டில் பிடுங்கின வரை லாபம் என்கிற போக்கில் செயல்படுவது சரியா? மிகுந்த சிரமத்திற்கிடையே இத்தகைய தகவல்களை வெளிக்கொண்டு வந்த திரு வி.சந்தானம் அவர்களைப் பாராட்டுவதும், இவற்றை அதிக அளவில் பொது மக்கள் கவனத்திற்கு கொண்டு போவதும் நம் கடமை

Vote for MSK

Greetings! 
Nothing is for Free….  Is it not ironic to be happy to get free TV worth of Rs 2400 while paying 1.75 lakh crore rupees to the politician for whom you cast your vote. 

Politicians who buy your vote today, will sell you tomorrow.


A bunch of like minded social activists who are in thirst of scam free politics, came together to form cleanest politics through MAKKAL SAKTHI KACHI. 
The magic wand for change is Vote and it is in your hands. Use it right and VOTE FOR MAKKAL SAKTHI KATCHI


Facebook Page for Makkal Sakthi Katchi:
   
 

MSK - Coimbatore


MSK - Chennai


Think And Vote


அரசியலை நாம் ஏன் போது இடங்களில் பேசுவதில்லை?

"ஜீரோ' ரூபாய் நோட்டைக்கொடுத்து ஓட்டு சேகரிக்கும் வேட்பாளர்

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=221662

தூத்துக்குடி: தூத்துக்குடி தொகுதியில் மக்கள் சக்தி கட்சி சார்பில் "விசில்' சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஆதிநாராயணன், வாக்காளர்களிடம் ஜீரோ ரூபாய் நோட்டைக்கொடுத்து, ஓட்டு சேகரித்துவருகிறார். ஊழல் ஒழித்து நல்லாட்சி அமைப்போம், நமது ஓட்டு விற்பனைக்கு அல்ல, தன்மானம் இழப்பதற்கு அல்ல என்ற வாசகங்களுடன், கலர் பேப்பரில் காந்தி படத்துடன் அச்சடிக்கப்பட்ட மதிப்பில்லாத ஜீரோ ரூபாய் நோட்டை(நிஜ ரூபாய் போல தோற்றம் கொண்டது) வாக்காளர்களிடம் தந்து ஓட்டு கேட்கிறார். தன்னை தேர்ந்தெடுத்தால் மது, லஞ்ச- ஊழலை ஒழித்து, கிராம சுயாட்சி, தரமான கல்வி, மருத்துவம் போன்றவற்றை தருவதாக வாக்குறுதியளித்துவருகிறார். இவரின் வித்தியாச பிரசாரம், வாக்காளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. 

ஒளி மிகு தமிழம் ஒளிர முதல் அடி உங்களுடையதாக இருக்கட்டும் - குரு

அன்புடையீர்., வரும் தமிழக சட்டசபை தேர்தலுக்குப்பின், வரும் ஆட்சி எப்படி அமைய வேண்டும் என்பதைவிட, எப்படிப்பட்டவர்கள் ஆட்சி தமிழகத்து நல்லது என தயவு செய்து ஆழமாக சிந்திப்பீர்..! அதற்கேற்ப ஓட்டை பயன்படுத்துவீர்...!!!

இப்போதைய தி.மு.க. கழக ஆட்சி வெறும் இலவசங்களை நம்பி களத்தில் இறங்கி உள்ளது. இதையே கடந்த கால சாதனையாக கூறி மகிழ்கிறது.இது சாதனையா? வேதனையா? கல்வி அறிவற்ற பாமரர்களும் விபரீதம் அறியாமல் இலவசங்களுக்கு மயங்கி, தங்கள் வாக்கை அடகு வைத்து, தமிகழத்தையும் அடகு வைக்கிறார்கள்.

இலவ்ச - தொலைகாட்சி பெட்டி, மின் மோட்டார்கள், நிலங்கள், காப்பீடு என்று போய், மீண்டும் ஆட்சிக்கு வந்தால், மாவரைக்கும் மிஷின்,(Grinder), மிக்ஸி, வாசிங் மெஷின், ஃப்ரிட்ஜ் எல்லாம் தருவோம் என் தி.மு.கவும்.,

நாங்கள் ஆட்சிக்கு வந்தால், நலிந்தவருக்கு, 4  ஆடுகளும், மாடுகளும் கால்நடை வளர்ச்சி திட்டத்தின் அடிப்படையிலும், ரேஷன் கார்டு பயனாளிகள் அனைவருக்கும் 20 கிலோ அரிசியும், நலிந்தவரிகளின் திருமணத்துக்கு,  4 கிராம் தங்கத்தாலி  மற்றும் ரூ. 50000 இலவசமாக,தரப்படும் என்றும் அ.தி,மு.கவும் தமிழக மக்களை மூளை சலவை செய்கின்றனர்.

இன்றைய நிலையில், தமிழக களஞ்சியம் காலி. கஜானவும் சுரண்டப்பட்டுவிட்ட்து. மேலும்,  மத்திய அரசால் அனுமதிக்கப்பட்ட உச்ச வரம்பு வரைக்கும் சென்று கடனை, தமிழகம் வாங்கி விட்டது. இனி இந்த 2 கழகத்தில் யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழகம் சந்திக்கப் போவது என்னமோ அழிவு என்பது மட்டும் நிச்சயம்.

ஏன் இந்த இரு கழகத்தை மட்டுமே  மாற்றி மாற்றி ஆட்சியில் அமர்த்த வேண்டும். இலவசம் எத்தனை நாளைக்கு தந்து கொண்டே இருக்க முடியும்? கடைசி ஏழை இருக்கும் வரை இலவசம் தொடரும் என்று கலைஞ்ர் முழக்கம் இடுகிறாரே. இது சாத்தியமா? கடைசி ஏழை வரைக்கும் இலவசம் கொடுத்தால், வறுமை போய் விடுமா? .உண்மையில் இது இவருக்கு தமிழகத்தின் மேலுள்ள வளர்ச்சியில் அக்கறையா? பதவி சுகம், அதிகாரம் தரும் போதை மயக்கம் போய் விடக் கூடாது என்ற ஆற்றாமையா?   

அதிமுகவும் இந்த வரிசையில் தானே உள்ளது....தயவு செய்து சிந்திப்பீர் என இதையெல்லாம் உங்களுக்கு தெரிந்தவர்களிடமெல்லாம் நீங்கள் சொல்லலாமே..!!!

உ.பி, & கர்நாடகாவைத் தவிர, இன்றைய மாற்று எதிர்க்கட்சி ரொம்ப திறமையாக இல்லாவிட்டாலும், தமிழகம் போல் எந்த வளர்ச்சிப்பணியும் பெரிய அளவில் நடைபெறாமல் சூரையாடப்படவில்லையே என்ற உண்மையை நீங்கள் நம்பினால், இதையெல்லாம் உங்களைச் சுற்றி இருப்பவர்களிடம் சொல்லலாமே..!!!

குஜராத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அங்கு இலவசம் இல்லை. முதலீடுகள் பெருகுகின்றன். வளர்ச்சி திட்டம் பெருமளவில் செயல்படுத்தப்படுகின்றன. தடையற்ற மின்சாரம். இந்தியாவின் முன்மாதிரியான ஒரு மாநிலமாக திகழ்கிறது.. பஞ்சாபிலும் இதே நிலைதான். 

நான் இந்த கட்சிக்கு என்று ஒரு சார்பாக ஒட்டு போடசொல்லி கேட்கவில்லை. ஆனால், இரு கழகத்தையும்  தவிர்த்து, உண்மையிலேயே ஓரளவு சுமாரனவர்களாகப் பார்த்து அவர்களுக்கு உங்கள் வாக்கைப் பயன்படுத்தலாமே என்று நீங்கள் உங்களைச் சுற்றி உள்ளவர்களுக்கு சொல்லாமே..அப்படி யாரும் இருப்பதாக தெரியவில்லை என்று சொன்னால், இருக்கிறது இந்த கட்சி, இந்த சின்னம்  என்று அவர்களுக்கு சொல்லி புரிய வைக்க நீங்கள் நாட்டுக்காக செய்யும் ஒரு தொண்டாய் இதை செய்யலாமே.

அரசியல் நமக்கு வேண்டாம். ஊழலும், லஞ்ச லாவண்யமும், சுயநலமும் ஓங்கி புரையோடிபோய்விட்ட அரசியல் சாக்கடையை சுத்தம் பண்ணுவது என்பது முடியக்கூடிய காரியமா? என ஒவ்வொருவரும் எனக்கென்ன வந்தது? யாரும் யாரையும் மாத்த முடியாது என்று இருந்தால், என்றுதான் இதற்கு விடிவுதான் எப்போது?  பொறுப்பற்ற முறையில் அலட்சியமாய் இருப்பதும் நாட்டுக்கு செய்யும் பெரும் துரோகம் அல்லவா? அறியாதவர்களுக்கு, அறிந்தவர்கள் புரியவைக்கப்போவதுதான் எப்போது? கற்றதனால் ஆன பயந்தான் என்ன? எல்லோரும் இதேபோல் முன்பு பல தியாகிகள் நினைத்திருந்தால்,இன்று சுதந்தர பாரதம் மலர்ந்திருக்குமா? மலர்ந்த பாரதம் வாடுவதினால், உண்மையான தியாகிகளின் முயற்சி அனைத்தும் வியர்த்தம் ஆவதற்கு நாம் உடந்தையாய் இருக்கலாமா?

எல்லாக் கொள்ளிக்கட்டையும் ஒன்றுதான் என்று இல்லாமல், எரியும் கொள்ளிக்கட்டையில், அதிகம் பாதிப்பு இல்லாத கொள்ளிக்கட்டை எது என இப்போதைக்கு பார்த்து, நம் தமிழகத்துக்கு நல்லது செய்ய எத்தனிப்போம். உங்கள் வாக்கை மட்டுமல்ல உங்களைச் சுற்றி உள்ளவர்களும் அவ்வாறே செய்ய நீங்கள் ஓரளவேனும் ஒரு அடி எடுத்து வைத்தால் அதுவே புரையோடிப்போன சீழ் மேலும் மோசமாகாமலாவது இருக்க.,  இன்றைய கால கட்டத்துக்கு செய்யும் ஒரு சிறு முதல் உதவியாகும். காலப்போக்கில் பொறுப்புள்ள ஒவ்வொரு பிரஜையாலும், பொறுப்பற்ற தன்மைக்கு முற்றுப்புள்ளி வைக்க, முதல் புள்ளியை நீங்கள் எடுத்து வைப்பதாக இருக்கட்டும்...

இலவசங்கள் வேண்டாம், நாட்டின் இறையாண்மையை அடகு வைக்க வேண்டாம். 

ஒளிமிகுதமிழம்ஒளிரமுதல்அடிஎடுத்துவைங்கள்.பொறுப்புள்ள ஒவ்வொரு இந்தியனாலும் பாரதமும் தானாக உலக அரங்கில் முன்னிற்கும். 

பல பணிகள் உங்களுக்கு, உண்மைதான். ஆனால் அதை நாம் வேறு நாட்டிலா இருந்துகொண்டு    செய்கிறோம். நம் வீட்டில் ஒரு பிரச்சனை என்றால், உடனே எல்லாவற்றையும் கொஞ்சம் தள்ளி வைத்து விட்டு, இதில் கவனம் செலுத்துவதுபோல்,இதையும் நாட்டுக்காக செய்ய முன்வரலாம். அதுவும் முடியவில்லையா? குறைந்த பட்சம் இந்த மெயிலையாவது உங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் forward பண்ணுங்கள். ஒரு பொறி போதும்..விடியல் ஏற்பட !!!

ஆகவே., தயவு செய்து இக்கட்டுரையின் முதல் பாராவை மீண்டும் ஒரு முறை படியுங்கள்.

எழுத்தாக்கம்
குருமூர்த்தி

லஞ்சத்தை வேரோடு அறுக்க, மக்களுக்கு பயிற்சி: மக்கள் சக்தியின் வேட்பாளர்கள் உறுதி


கோவை: மக்கள் சக்தியின் வேட்பாளர்கள் 36 பேரும், தேர்தலில் வெற்றி தோல்வியை பொருட்படுத்தாமல், எம்.எல்.ஏ.,வாகவோ அல்லது நிழல் எம்.எல்.ஏ.,வாக (தோல்வியுறும்பட்சத்தில்) செயல்படுதல்; தேர்தல் அறிவிப்பு நாளில் இருந்து இன்று வரை, வாக்காளர்களுக்கு பணம், மது வழங்கவில்லை, இனியும் வழங்க மாட்டோம்; ஊழலால் பாதிக்கப்பட்டவருக்கு தகுந்த நீதிக்காக பாடுபடுதல்; லஞ்சம் எனும் கொடிய நோயினை வேரோடு அறுக்க, மக்களுக்கு பயிற்சிகளை வழங்குதல்; மக்கள் பிரச்னைகளுக்கு சட்ட விழிப்புணர்வு முயற்சிகளை தன்னார்வ ரீதியில் அணுகி, தீர்வு கிடைக்கச் செய்தல் ஆகிய உறுதிமொழியினை எடுத்துக் கொண்டனர்.

ஊழலற்ற சமுதாயத்தை உருவாக்க வேண்டுமென, மக்கள் சக்தி என்னும் கட்சி தேர்தல் களத்தில் குதித்தது. தமிழகத்தில் 36 வேட்பாளர்களில், கோவையில் 6 பேர் போட்டியிடுகின்றனர். தேர்தல் பிரசாரத்தை முடித்துக் கொண்டு, நேற்று பத்திரிகையாளர் சந்திப்புக் கூட்டம் நடந்தது.இக்கூட்டத்தில், பொதுமக்களும் பங்கேற்றனர். இதில், மக்கள் சக்தி வேட்பாளர்கள் ஆறு பேரும் பொதுமக்கள் முன்னிலையில் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.

மக்கள் சக்தியின் வேட்பாளர்கள் 36 பேரும், தேர்தலில் வெற்றி தோல்வியை பொருட்படுத்தாமல், எம்.எல்.ஏ.,வாகவோ அல்லது நிழல் எம்.எல்.ஏ.,வாக (தோல்வியுறும்பட்சத்தில்) செயல்படுதல்; தேர்தல் அறிவிப்பு நாளில் இருந்து இன்று வரை, வாக்காளர்களுக்கு பணம், மது வழங்கவில்லை, இனியும் வழங்க மாட்டோம்; ஊழலால் பாதிக்கப்பட்டவருக்கு தகுந்த நீதிக்காக பாடுபடுதல்; லஞ்சம் எனும் கொடிய நோயினை வேரோடு அறுக்க, மக்களுக்கு பயிற்சிகளை வழங்குதல்; மக்கள் பிரச்னைகளுக்கு சட்ட விழிப்புணர்வு முயற்சிகளை தன்னார்வ ரீதியில் அணுகி, தீர்வு கிடைக்கச் செய்தல் ஆகிய உறுதிமொழியினை எடுத்துக் கொண்டனர்.

கூட்டத்திற்கு தலைமை வகித்த, கட்சியின் மாநில தலைமைக் குழு உறுப்பினர் மற்றும் கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் விஜய்ஆனந்த் பேசியது: வெற்றி தோல்வியை கருத்தில் கொள்ளாமல், வரும் 14ம் தேதி முதல் எம்.எல்.ஏ., போன்று செயல்படுவோம். பிரசாரத்தை வெற்றிகரமாக, புதுமையான அணுகுமுறையில் இருந்தது. எங்கள் வேட்பாளர்கள் சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கையில் ஈடுபடவில்லை. இதை தேர்தல் கமிஷன் மற்றும் பொதுமக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம். வரும் நாட்களிலும் கடமை உணர்வோடு, கட்டுப்பாடுடன் நடப்போம். எம்.எல்.ஏ., பொறுப்பேற்றவுடன், திட்டங்களை முழுமையாகக் கொண்டு செல்வோம். சட்டசபைக்கு வெளியில் இருந்தாலும், எம்.எல்.ஏ., போன்று மக்கள் பிரச்னையில் பங்கேற்போம், என்றார்.

கிணத்துக்கடவு வேட்பாளர் இளங்கோ கூறுகையில், ""எங்களது நோக்கம் தனிப்பட்டவரை தாக்குவதல்ல; நல்லது செய்ய வேண்டும். கல்வித்தரம் குறைந்து வருகிறது. எட்டாம் வகுப்பு வரை பாஸ் என்பது தவறான ஒன்று; இது எந்த நாட்டிலும் இல்லை. இலவசங்களை கண்டு ஏமாறக்கூடாது'' என்றார்.

கோவை வடக்கு தொகுதி வேட்பாளர் துரைராஜ் பேசுகையில், ""ஒவ்வொரு வேட்பாளர்களையும் சந்தித்தோம். இரு கூட்டணிக்கும் எதிரான உணர்வினை மக்கள் வெளிப்படுத்துகின்றனர். பிரசாரத்தின் போது ஒரு பெரியவரை சந்தித்தேன்; எங்களது கொள்கையை கேட்டுக் கொண்டு என்னிடம் "காமராஜருக்கு பிறகு, 30 ஆண்டுகளாக நான் வேறு யாருக்கும் ஓட்டளிக்கவில்லை; உன்னை தலைவனாக ஏற்றுக்கொண்டு ஓட்டளிக்கிறேன்'' என்றார்.

இதை சொல்லி முடிப்பதற்குள், எங்கள் மீது இப்படி நம்பிக்கை வைத்திருக்கிறார்களே என்று துரைராஜ் விக்கிவிக்கி அழுதார். தொடர்ந்து பேச முடியாதவாறு, மக்களின் மீதுள்ள உண்மையான பாசம், அவரது தொண்டையை அடைத்தது. கூட்டத்தில் இருந்த அனைவரது மனதையும் நெருடியது. தொடர்ந்து இதர வேட்பாளர்கள் தங்களது கருத்துகளை கூறினர்

Sunday, March 20, 2011

ஏய்!தலை வணங்கா தமிழினமே!வந்தாரையே வாழ வைக்கும் நமக்கு ஏன் வேண்டும் இலவசம்?


முல்லைக்கொடி படர்வதர்க்கே தேர் தந்த பாரி வேந்தன் வழி வந்த நமக்கு கொடுத்துதான் வழக்கமே தவிர இலவசமாய் வாங்கி வழக்கமில்லை!


மயிலுக்கும் போர்வை தந்து,உயிர் காக்கும் நெல்லிக்கனியைக் கூட பிறருக்கு கொடுத்து புளகாங்கிதம் அடையும் மன்னன் வழி வந்த நமக்கு இலவசத்தை வாங்க கரங்களும்,மனமும் கூச வேண்டாமா?


தமிழ்,தமிழன் என தூண்டி விட்டு நம் தேசிய மொழியைக் கூட கற்க விடாமல் குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்ட விட்டு விட்டு கைக்கெட்டும் தூரத்தில் நம் தமிழினம் செத்து மடிந்தபோது தமிழுணர்வு பதவி என்னும் நாற்காலிக்குக் கீழே நசுக்கப் பட்டதே!


நயவஞ்சகர்களின் விஷம் தடவிய நாக்குகள் தேனொழுக பேசி பேசியே ஆட்சியை பிடித்து தமிழினத்தை அடிமை கொண்டதே!


வீரம்,விவேகம்,பண்பாடு,கொடை ஒருங்கே அமையப் பெற்ற எட்டுதிக்கும் கொடி நாட்டிய எம் தமிழினம்,உழைப்பு ஒன்றையே மூலதனமாக கொண்ட எம் தமிழினம் இலவசத்தை ஏற்கலாமா?


யாரோ சில கொடியவர்கள் பட்டு மஞ்சத்திலும்,செல்வ செழிப்பிலும் புரள்வதற்கு,உழைக்காமல் உண்டு கொழுப்பதர்க்கு எம் தமிழர்களை பகடைக்காயாக்கி இலவசம் எனும் சேற்றை நம் மீது பூசி பிச்சைக்காரன் வேஷம் போட நினைக்கின்றனர்! 


பிச்சையின் மறு பெயர்தான் இலவசம்!


எனவே இலவசத்தை நாம் ஆதரித்தால் பிச்சைக்காரனின் மறுபெயர் தமிழன் என நாளைய சரித்திரம் சொல்லும்!


நம் சரித்திரத்தையே மாற்றியமைக்கும் இந்த அரசியல் தரித்திரங்களின் தலைஎழுத்தை மாற்றி எழுதுவோம்!


இலவசத்தை வெறுப்போம்!இலவசத்தை வேரோடு சாய்ப்போம்!உழைப்போம்!வெற்றி பெறுவோம்! 


இலவசங்களை கொடுத்து நம்மை பிச்சைகாரராய் மாற்றிய மன்னராட்சி புரியும் மு க அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு நிச்சயம் தங்க திருவோடு இலவசமாய் கொடுத்து அதில் நமக்கு பிச்சை போடுவார் என்பது நிச்சயம்.


இனியும் நாம் இலவசங்களுகாக ஓட்டு போடுவோமானால் நமது சந்ததி நிச்சயம் உலக மகா சோம்பேறிகளாக ஆவதை யாராலும் தடுக்க முடியாது. 


இலவச டிவி, அரிசி,கொடுத்தவர் அதனுடன் சோம்பல் யனும் நோய்யும் பரிசாக கொடுத்துள்ளார்.


இந்த நோயை மென்மேலும் வளர்க்க அணைத்து அரசியல் கட்சிகளும் ஆவலுடன் உள்ளன.


அதை இந்த ஒரு வாரமாக நடந்து வரும் கூட்டணி பேரம் நமக்கு நெற்றிபோட்டில் சம்மட்டி கொண்டு அடித்தது போல் உணர்திள்ளது. ஏன் இவ்வளவு போட்டி? 


மக்களுக்கு நல்லது செய்வத்ர்க்காவாக? இத்தனை பேர் சேர்ந்து ஆட்சி அமைப்பது அவர்கள் சொத்து சேர்க்கவே தவிர மக்களுக்கு நன்மை செய்ய இல்லை என்பது கடந்த ஆட்சி தலைவர்கள் நிருபித்துள்ளனர்.


அவர்கள் மேல் உள்ள ஊழல் வழக்கு பல இன்னும் நிலுவையில் இறுக்க அந்த ஊழல் முகத்தை மறைக்க தேர்தல் வாக்குறுதி என்னும் முகமூடி அணிந்து வருபவர்களை அடையாளம் காண தெரியாத பாமர மக்களின் கூட்டத்தில் ஒருவனாக இருப்பதை தவிர வேறு யன்ன செய்ய முடியும் நம்மால்.தெரிந்தால் கூறுங்கள் மக்களே . 


கையாலகாத மக்களில் ஒருவன் . நன்றி


The above comments is from Dinamalar... There is party to change all these things... New politics for New Generation : Makkalsakthi Katchi

Wednesday, March 9, 2011

மடைமாற்றப்படும் மக்கள் பணம் - Dinamani


மடைமாற்றப்படும் மக்கள் பணம்

First Published : 09 Mar 2011 01:46:07 AM IST


தமிழ்நாட்டின் இயற்கை வளங்களும் மக்களின் வரிப்பணமும் மடைமாற்றப்பட்டு ஆள்பவர்களின் குடும்பக் கருவூலங்களில் நிறைந்து கொண்டிருக்கின்றன.

தமிழ்நாட்டில் இயற்கை வளம் குவிந்து கிடக்கிறது. பழுப்பு நிலக்கரி, இரும்புத் தாது, கிராபைட், ஜிப்சம், சுண்ணாம்புச் சிப்பி, சுண்ணாம்புக் கல், உயர்ரக களிமண், மாங்கனசைட், சிலிக்கான் மணல், பெட்ரோல், இயற்கை வாயு போன்றவை தாராளமாகக் கிடைக்கின்றன.

இவற்றைப் பயன்படுத்தி மக்களின் நிலையை உயர்த்துவதற்குப் பதில் இந்த வளங்களை அந்நியர்களும், தனிப்பட்டவர்களும் சுரண்டிக் கொழுப்பதற்கு வழிவகுத்துவிட்டு அவர்கள் அள்ளித்தரும் கையூட்டைத் தங்கள் கருவூலங்களில் நிரப்பிக்கொண்டு மகிழும் ஆட்சியாளர்கள் உள்ளனர்.

தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுவதிலும் இந்நிலைதான் தொடர்கிறது. மத்திய அரசின் சுரங்கத் துறை தரும் புள்ளிவிவரப்படி இந்தியாவில் 86 வகை கனிமங்கள் கிடைக்கின்றன. பாக்சைட் உற்பத்தியில் உலக அளவில் இந்தியா மூன்றாம் இடத்தில் உள்ளது. இரும்புத் தாது உற்பத்தியில் 4-வது இடத்திலும், மாங்கனீஸ் உற்பத்தியில் 5-ம் இடத்திலும் உள்ளது.

இரும்பு, செம்பு, தங்கம், வைரம் போன்ற 13 வகை கனிமங்களை வெட்டி எடுக்கும் உரிமம் அரசுக்கு மட்டுமே இருந்தது. ஆனால், 1993-ம் ஆண்டிலிருந்து இத்தொழிலில் நுழைய தனியார்களும் அனுமதிக்கப்பட்டனர்.

அகில இந்திய அளவில் சட்டரீதியாக உரிமம் பெற்ற 8,700 சுரங்கங்கள் இயங்குகின்றன. உரிமம் இல்லாமல் சட்டவிரோதமாக சுமார் 15,000 சுரங்கங்கள் செயல்படுகின்றன. உரிமம் பெற்ற சுரங்க நிறுவனம், உரிமக்காலம் முடிந்த பிறகும் கனிமங்களை வெட்டி எடுப்பது சர்வசாதாரணமாக நிகழ்கிறது. மேற்கண்ட வகைகளில் ஆண்டுதோறும் பல ஆயிரம் கோடி ரூபாய் தனிநபர்களாலும் ஆள்பவர்களாலும் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் உயர்ந்த ரக கருங்கல் (கிரானைட்) கிடைக்கிறது. ஜப்பானுக்கும் மேற்கு நாடுகளுக்கும் இவை ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஆனால், உரிமம் பெறாமலேயே தமிழ்நாட்டில் தனியார் நிறுவனங்கள் இவற்றைக் கொள்ளையடிக்கின்றன. ஆட்சிப்பொறுப்பில் இருப்பவர்களுக்கு இக்கொள்ளையில் ஒருபகுதி வழங்கப்படுகிறது.

அதன் காரணமாக கண்ட இடங்களில் எல்லாம் குறிப்பாக விவசாய ஏரிகள், நஞ்சை நிலங்கள் போன்றவை அழிக்கப்பட்டு கிரானைட் கற்கள் தாறுமாறாக வெட்டி எடுக்கப்பட்டு சூறையாடப்படுகின்றன. இதில் கிடைக்கும் கொள்ளைப் பணத்தில் ஒரு சிறுபகுதி அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு மடைமாற்றம் செய்யப்படுகிறது. இச்சிறு தொகைக்காக மக்களுக்குச் சொந்தமான விலைமதிக்க முடியாத இயற்கை வளங்களைத் தனியார் சூறையாடுவதற்கு அனுமதிக்கப்படுகிறது.

1996-ம் ஆண்டு முதல் தமிழக ஆறுகளில் மணல் கொள்ளை வரைமுறையில்லாமல் நடைபெற்று வருகிறது. குறிப்பாக, இந்த மணல் கொள்ளையை நடத்திக்கொள்ள ஒரு குறிப்பிட்ட நபர் அனுமதிக்கப்பட்டார். மணலை விற்று இவர் அடித்த பெரும் கொள்ளையில் ஒரு சிறு பகுதியை ஆட்சியிலிருப்பவர்களுக்கு மடைமாற்றம் செய்கிறார். ஆட்சிகள் மாறினாலும் இந்த நபர் மாற்றப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

அண்டை மாநிலங்களான கர்நாடகம், கேரளம் போன்றவற்றில் ஆறுகளில் மணல் எடுக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. எனவே, தமிழக ஆற்று மணல் இம்மாநிலங்களுக்கு லாரிலாரியாக கொண்டு செல்லப்படுகிறது. அங்கிருந்து அரபு நாடுகளுக்கு ஏற்றுமதியும் ஆகிறது. மணல் கொள்ளையைத் தடுக்க முயன்ற அரசு அலுவலர்களையும், மக்கள் தொண்டர்களையும் மணல் கொள்ளைக் கும்பல் படுகொலை செய்யத் தயங்கவில்லை. ஆளும் குடும்பத்துக்கும், அமைச்சர்களுக்கும் முதலீடு இல்லாத வருவாய் ஈட்டித்தரும் தொழிலாக மணல் விளங்குவதால் இந்தக் கொள்ளையைத் தடுக்க அதிகாரிகள் எதுவும் செய்வதில்லை. உயர் நீதிமன்றம் தலையிட்டு பிறப்பித்த பல ஆணைகளையும் அதிகாரிகள் மதிப்பதில்லை. மணல் கொள்ளையில் ஈடுபடும் ஒருவரைக்கூட குண்டர் சட்டத்தில் கைது செய்வதில்லை. ஆனால், மணல் கொள்ளையைத் தடுத்த அப்பாவி மக்களை, சட்டம் ஒழுங்கு பிரச்னை என்று கூறி கைது செய்கிற கொடுமையும் நடைபெறுகிறது.

திரைப்படத்துறை ஆட்சியாளர்களின் செல்லப்பிள்ளையாக விளங்கி வருகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு ஆண்டுக்கு 400 கோடி ரூபாயாக வசூலிக்கப்பட்ட கேளிக்கை வரி, 2009-2010-ம் ஆண்டில் 10 கோடியே 60 லட்சம் ரூபாயாகச் சரிந்திருக்கிறது. ஆனால், திரைப்படத் துறை மிகப்பெரிய அளவுக்கு வளர்ந்திருக்கிறது. அந்த அளவுக்கு கேளிக்கை வரி வசூல் ரூ.1,000 கோடிக்கு மேல் உயர்ந்திருக்க வேண்டும். ஆனால், படுமோசமாகச் சரிந்திருக்கிறது.

இதற்குக் காரணம் தமிழக அரசின் கருவூலத்துக்கு வரவேண்டிய சுமார் 1,000 கோடி ரூபாய் அளவுக்கான கேளிக்கை வரி மடைமாற்றப்பட்டுள்ளது. இதற்கு 2006-ம் ஆண்டு டிசம்பர் 4-ம் தேதி தமிழக அரசு வெளியிட்ட ஓர் ஆணையே காரணமாகும்.

அதாவது திரைப்படங்களின் பெயர் தமிழில் இருந்தால் அவற்றுக்கு முழுமையாகக் கேளிக்கை வரி ரத்து என்ற ஆணையை முதலமைச்சர் கருணாநிதி பிறப்பித்தார். இதன் விளைவாக, 800 கோடி ரூபாய்க்கு மேல் அரசுக்கு வரவேண்டிய கேளிக்கை வரி, 10 கோடி ரூபாய் அளவுக்குச் சரிந்துவிட்டது. இதில் கொடுமை என்னவென்றால் பல படங்களின் பெயர்கள் தமிழே அல்ல. படங்களிலும் தமிழர்களின் பண்பாடு, கலை, இசை ஆகியவற்றை எடுத்துக்காட்டும் வகையிலும் அமையவில்லை. ஆனாலும் இந்தப் படங்களுக்குக் கேளிக்கை வரி முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் விளைவாக திரைப்படத் திமிங்கலங்களும், பெரு நடிகர்கள் மட்டுமே ஆதாயம் அடைந்தனர்.

2001-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டுவரை கேளிக்கை வரி விதிப்பிலிருந்து விலக்குப்பெற்ற படங்களின் எண்ணிக்கை 1,225 ஆகும். இந்தப் படங்களில் பெரும்பாலானவற்றை முதலமைச்சரின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களே திரையிடும் உரிமையைப் பெற்றிருந்தனர் என்பது அதிர்ச்சிகரமான உண்மையாகும்.

இதன் விளைவாக கேளிக்கை வரியாக அரசு கருவூலத்துக்கு வரவேண்டிய சுமார் 1,000 கோடி ரூபாயில் பெரும்பகுதி முதலமைச்சரின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு மடைமாற்றம் செய்யப்பட்டுவிட்டது.

தமிழ்நாட்டில் உள்ள திரையரங்குகளில் பெரும்பகுதி முதலமைச்சரின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே, அவர்கள் திரைப்படக் கொட்டகைகளில் அனுமதிச் சீட்டுக் கட்டணமாக ரூ.100-வரை வசூலிக்கிறார்கள். இந்த அக்கிரமமான கட்டணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்துவதில்லை.

2006-ம் ஆண்டு கருணாநிதி முதல்வர் ஆவதற்கு முன்புவரை தமிழ்நாட்டில் 6 மது உற்பத்தி நிறுவனங்கள்தான் இருந்தன. ஆனால், இப்போது அவைகளின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்திருக்கிறது. முன்பு பீர் தயாரிக்கும் நிறுவனங்கள் 4 மட்டுமே இருந்தன. இப்போது அவற்றின் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது. ஆக, இந்த 19 மது உற்பத்தி ஆலைகளை நடத்தும் உரிமம் பெற்றவர்கள் யார் என்பதை ஆராய்ந்தால் இவற்றில் பல ஆலைகள் தி.மு.க.வின் முன்னாள், இன்னாள் அமைச்சர்களின் குடும்பங்களுக்கு உரிமையானவை அல்லது இக்குடும்பங்களுக்கு நெருக்கமானவர்களுக்குச் சொந்தமானதாக இருக்கும். இந்த ஆண்டு மது விற்பனை மூலம் தமிழக அரசுக்கு ரூ.14,500 கோடி வருவாய் கிடைத்துள்ளது. அதாவது, அரசை நடத்துபவர்களுக்கும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கும் சொந்தமான மது ஆலைகளில் உற்பத்தியாகும் மதுவை அரசே விற்றுக்கொடுக்கிறது. அதாவது மக்களின் மடியிலிருந்து உருவப்படும் இந்தப் பணம் இறுதியில் மடைமாற்றம் செய்யப்பட்டு அதிகாரத்தில் இருப்பவர்களின் சொந்தக் கருவூலங்களை நிரப்புகிறது.

தமிழ்நாட்டில் இதுவரை 53 சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், 80 சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அனுமதிக்காக பரிசீலனையில் உள்ளன. இவற்றுக்கான நிலங்கள் எவ்வாறு பெறப்படுகின்றன என்பதை ஆராய்ந்தால் அதிர்ச்சி அடைவோம்.

அதாவது தரிசு நிலங்கள் அல்லது அரசு புறம்போக்கு நிலங்கள் இவற்றுக்கு ஒதுக்கப்படுவதில்லை. மாறாக, விவசாயிகளுக்குச் சொந்தமான நல்ல விளைநிலங்கள் கட்டாயமாகப் பறிமுதல் செய்யப்பட்டு சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு வழங்கப்படுகின்றன என்பதுதான் அந்த அதிர்ச்சிகரமான உண்மையாகும். ஒரு சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைப்பதற்கு 1,000 ஏக்கர் நிலம் தேவைப்பட்டால், 10,000 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்துகிறார்கள்.
ஆயிரம் ஏக்கரில் தொழிற்சாலையை அமைத்துவிட்டு, மீதமுள்ள நிலத்தை பல மடங்கு அதிகமான விலையில் விற்றுக் கொள்ளை லாபம் சம்பாதிக்கிறார்கள் என்பதுதான் உண்மையாகும். இந்தக் கொள்ளையிலும் மடைமாற்றம் நடைபெறுகிறது.

2005-ம் ஆண்டு சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்கான புதிய சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தது. சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு இறக்குமதி, ஏற்றுமதி சுங்கத் தீர்வைகளிலிருந்து விலக்கு, கலால் வரியிலிருந்து விலக்கு, விற்பனை வரியிலிருந்து விலக்கு, ஈடுகட்டும் லாபத்துக்கு 15 ஆண்டுகளுக்கு வரி கிடையாது என்பதுபோன்ற சலுகைகள் வாரி வழங்கப்பட்டன. இதைத்தவிர, தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் இந்தச் சிறப்புப் பொருளாதார மண்டலங்களை அமைத்து அதில் உள்ள இடங்களை தொழில் நிறுவனங்களுக்கு விற்கலாம், குத்தகைக்குக் கொடுக்கலாம். இந்த மண்டலத்தில் தொழிற்கூடங்களோடு குடியிருப்புகள், பள்ளிகள் உள்ளிட்ட சகல வசதிகளும்கொண்ட நகரங்களையும் அமைத்துக் கொள்ளலாம். இந்தச் சலுகைகளின் விளைவாக, தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் சுமார் ஒரு லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் ரியல் எஸ்டேட்டுகளாக மாற்றப்படுகின்றன. விவசாயிகளை வஞ்சித்தும் மிரட்டியும் நிலத்தைப் பறித்துக் கொடுப்பதற்குக் கையூட்டாகப் பெரும்பணம் மடைமாற்றம் செய்யப்படுகிறது.

கடலூரில் இருந்து வேதாரண்யம் வரையில் எட்டு அனல் மின்நிலையங்களைத் தனியார் நிறுவனங்கள் அமைக்க உள்ளன. அதற்காகப் பல்லாயிரம் ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. இது தவிர, கடற்கரை முழுவதும் தனியார்வசம் ஆகப்போகிறது. சிறப்புப் பொருளாதார மண்டலங்களைப்போல இதற்கும் தேவைக்கு அதிகமாக பன்மடங்கு நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. இதில் மிகப்பெரிய அளவுக்கு ரியல் எஸ்டேட் கொள்ளை நடப்பதாகக் குற்றம்சாட்டி, அந்தப்பகுதி மக்கள் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

கல்வி நீரோடையை அனைவருக்கும் இலவசமாக்கி ஏழை எளிய பாமர மக்களின் கல்விக்கண்களைத் திறந்த காமராஜ் வாழ்ந்த தமிழகத்தில், இன்றைக்கு கல்வி, கொள்ளைத் தொழிலாக மாற்றப்பட்டுள்ளது. பிற மாநிலங்களில் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் என்பதே கிடையாது. ஆனால், தமிழ்நாட்டில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மெட்ரிகுலேஷன் பள்ளிகள் என்ற பெயரில் தனியார் வணிகம் நடத்தி வருகிறார்கள். 400-க்கும் மேற்பட்ட தனியார் பொறியியல் கல்லூரிகள் தமிழ்நாட்டில் உள்ளன. இந்தப் பள்ளிகளிலோ அல்லது கல்லூரிகளிலோ போதுமான கட்டமைப்பு வசதிகளோ, ஆசிரியர்களோ இல்லை. புற்றீசல்போல தனியார் பள்ளிகளும், பொறியியல் மற்றும் கலைக்கல்லூரிகளும் பெருகக் காரணம் குறிப்பிட்ட அளவு கையூட்டு வழங்குவதுதான் என்பது ஊரறிந்த ரகசியமாகும்.

தமிழக முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு எத்தனை கல்விக்கூடங்கள் சொந்தமாக உள்ளன என்பது பகிரங்கப்படுத்தப்பட்டால் நாடே அதிரும். இந்தக் கல்வி நிலையங்கள் கொள்ளை நிலையங்களாகக் காட்சி தருகின்றன. இதன் விளைவாக, மத்திய அரசால் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட 44 பல்கலைக்கழகங்களில் 17 தமிழ்நாட்டைச் சேர்ந்தவை என்ற உண்மை கல்வித்துறை எவ்வளவு புரையோடிப் போயிருக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டாகும். கல்வி நிலையங்களில் அடிக்கும் கொள்ளையில் ஒருபகுதி மடைமாற்றம் செய்யப்பட்டு ஆளும் குடும்பங்களுக்குப் போய்ச் சேருகிறது.

நாட்டின் இயற்கை வளத்தையும் மக்கள் அளிக்கும் வரிப்பணத்தையும் பல்வகைகளிலும் சூறையாடித் தங்கள் சொந்தக் கருவூலத்தில் நிரப்பிக் கொள்பவர்களைவிட நாட்டுக்கும் மக்களுக்கும் துரோகம் செய்பவர்கள் வேறு யாராகவும் இருக்க முடியாது.






















Friday, January 28, 2011

சோனியா. இத்தாலி மாஃபியா. ஆனந்த விகடன்


நன்றி ஆனந்த விகடன்


சோனியா ...இத்தாலி மாஃபியா

சோனியாவை 'சொக்கத் தங்கம்’ என்ற அடைமொழியுடன்தான் அழைப்பார் முதல்வர் கருணாநிதி. ஆனால், 'ஊழல் உலோகம்’ என்று சோனியாவை அழைக்க ஆரம்பித்திருக்கிறார்கள் டெல்லிப் பத்திரிகையாளர்கள்.

125 ஆண்டுகளைக் கடந்த காங்கிரஸ் கட்சி, இன்று நித்தமும் ஊழல், முறைகேடுகளுக்கு விளக்கம் சொல்வதை மட்டுமே தனது வேலையாக வைத்திருக்கிறது. வெள்ளையர் களை விரட்டியதே இவர்கள் பங்கு பிரிக்கத் தானோ என்று அச்சம்கொள்ளும் அளவுக்கு ஊழல் குற்றச்சாட்டுகள் குவிய ஆரம்பித்து இருக்கின்றன. ஊழலே நடக்காமல் தடுக்க, சோனியாவால் முடியாது. ஆனால், அது வெளிச்சத்துக்கு வந்த பிறகேனும், உறுதியான நடவடிக்கை களை எடுத்திருக்க வேண்டும். நடவ டிக்கை எடுக்காதது மட்டுமல்ல; அதை மறைக்கும் காரியங்களும் சோனியா ஆசீர்வாதங்களுடன் நடப்பதுதான் இந்திரா காங்கிரஸுக்கு 'கரப்ஷன் காங்கிரஸ்’ என்று பட்டம் சூட்டக் காரணமாகிறது!

'ஊழலைப் பொறுத்துக்கொள்ளவே முடியாது. ஊழல் மற்றும் தவறான நடவடிக்கை எதுவாக இருந்தாலும், காங்கிரஸ் கட்சி அதைப் பொறுத்துக் கொள்ளாது. அதிகப்படியான எளிமை யும் கட்டுப்பாடும் நம்முடைய வழி களாக இருக்க வேண்டும். அதிகப்படியான சொத்துக்கள் மற்றும் வசதி வாய்ப்பைவெளிப் படுத்தும் வகையில் காங்கிரஸ்காரர்கள் நடந்து கொள்ளக் கூடாது. அதன் மூலம் மற்றவர்கள் கண்களை உறுத்துவதையோ, மற்றவர்க்குப் பொறாமை ஏற்படுத்துவதையோ அனுமதிக்கக் கூடாது. பொது வாழ்வில் ஈடுபடுவோர், அரசியல் வாதிகள் மீதான அனைத்து ஊழல் வழக்கு களும் குறிப்பிட்ட காலத்துக்குள்விசாரிக்கப் பட வேண்டும்!’ - சொன்னவர் மகாத்மா காந்தி அல்ல; சோனியா காந்தியேதான்!

30 நாட்களுக்கு முன் நடந்த அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில்தான் இப்படி முழங்கி னார் சோனியா. ஆனால், இந்த ஒரு மாதத்துக் குள் காங்கிரஸுக்கு எதிரான அத்தனை வழக்குகளையும் முடிந்த அளவுக்கு ஆறப் போட்டுவைக்கவும் காரணம், இதே சோனியாவே!

நம்பர் 10, ஜன்பத் வீட்டு ஊறுகாய்ப் பானைக்குள் ஊறப்போடப்பட்டுவிட்ட வழக்குகளின் கதையைவைத்து ஊழல் பாரதம் படைக்கலாம். ஸ்பெக்ட்ரம் முதல் போஃபர்ஸ் வரை அனைத்தும் நம் கண்ணுக்கு முன்னால் தேய்பிறை ஆகிக்கொண்டே இருக்கின்றன!

புஸ் ஆகும் ஸ்பெக்ட்ரம்! 

இந்திய தேசம் இதுவரை சந்திக்காத மிகப் பெரிய அவமானம்... ஸ்பெக்ட்ரம் 2ஜி அலை வரிசை ஒதுக்கீட்டு ஊழல். அரசாங்கக் கணக்குக்கு வந்தாக வேண்டிய பணத்தைச் சில தனி மனிதர்கள் தங்களது சொந்த சுக போகங் களுக்குத் திருப்பிக்கொண்டார்கள் என்ற குற்றச்சாட்டை மத்திய ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையம் தன்னுடைய தாக்கீ தாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் தந்தது.

'சுமார் 22 ஆயிரம் கோடி ரூபாய் பணம் கைமாறி உள்ளது!’ என்று அவர்கள் குற்றம்சாட்ட... அதில் முகாந்திரம் இருப்பதாகச் சந்தேகப்பட்ட பிரதமர், வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்த சி.பி.ஐ-க்குக் கட்டளை இட்டார். ஓர் ஆண்டு காலம் அவர்கள் 'அமைதியாக’ விசாரித்து வந்தார்கள். அதற்குள் மத்தியக் கணக்கு மற்றும் தணிக்கைத் துறை தன்னுடைய அறிக்கையை வெளியிட்டது. 'முறைப்படி, விதிமுறைகளை ஒழுங்காகப் பின்பற்றி இந்த அலைக்கற்றைகளைக் கொடுத்து இருந்தால், 1.76 லட்சம் கோடி வரை அரசாங்கத்துக்கு லாபம் கிடைத்திருக்கும்!’ என்று சி.ஏ.ஜி. கூறியது. எதிர்க் கட்சிகள் இதைச் சிக்கெனப் பிடித்துக்கொண்டன.

நாடாளுமன்றத்தை நடத்த முடியாத அளவுக்கு ஸ்பெக்ட்ரம் நாறியது. அந்தத் துறை அமைச்சராக இருந்த ஆ.ராசாவை ராஜினாமா செய்யவைத்தார்கள். எதிர்க் கட்சிகளையும் உச்ச நீதிமன்றத்தையும் இதன் மூலம் அமைதியாக்கிவிட காங்கிரஸ் நினைத்தது. ஆ.ராசா முதல் அவரது பினாமிகள் வீடுகள் வரை சி.பி.ஐ. ரெய்டு போனது. அவரே கடுமையான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். இவை எல்லாமே டிசம்பர் சீஸனாக முடிந்து போனது.

''அலைக்கற்றை ஒதுக்கீட்டால் அரசாங்கத் துக்கு ஒரு பைசாகூட இழப்பு இல்லை!'' என்று பேச ஆரம்பித்தார், ராசாவுக்குப் பிறகு அந்தத் துறைக்குப் பொறுப்பேற்றுக்கொண்ட மத்திய அமைச்சர் கபில்சிபல். ஒதுக்கீடு பெற்ற நிறுவனங்களின் உரிமம் ரத்தாகும், அவர்கள் மீது நடவடிக்கை பாயும் என்று நவம்பர் மாதம் மீடியாக்களிடம் கர்ஜித்த கபில்சிபலின் வார்த்தைகள் ஜனவரியில் தேய்ந்தன. இந்த நிறுவனங்களுக்கு ரகசிய சுற்றறிக்கை அனுப்பி ஃபைன் போடப்பட்டதாகவும், அதை அவர் கள் உடனே செலுத்தியதாகவும் கணக்குக் காட்டினார் கபில்சிபல். 'ஃபைன் கட்டியதால் பிரச்னை முடிந்தது’ என்றார்.

இது குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சிவராஜ் பாட்டீல் தலைமை யில் விசாரணைக் கமிஷனை அமைத்தார் பிரதமர். நீதிபதிக்குத் தரப்பட்ட கால எல்லை முடிந்த பிறகும் அறிக்கை வரவில்லை. இந்த லைசென்ஸை வாங்கித் தரும் புரோக்கராகச் செயல்பட்ட நீரா ராடியாவின் பேச்சுகள் அடங்கிய டேப்புகள்பற்றி, அமைச்சரவைச் செயலாளர் கே.எம்.சந்திரசேகரிடம், அறிக்கை தாக்கல் செய்ய பிரதமர் உத்தரவிட்டார். அந்த அறிக்கையும் வந்ததாகத் தெரியவில்லை. ரெய்டு அடித்த களைப்பில் இருந்து இன்னமும் சி.பி.ஐ. அதிகாரிகள் மீளவில்லை. அவர்கள் மத்தியிலும் சுணக்கம் ஏற்பட்டுவிட்டது.

தி.மு.க-வுடன் காங்கிரஸ் கூட்டணி முடிவானதால், இந்த வழக்கு முடக்கப்பட்டதா அல்லது சுப்பிரமணியன் சாமி சொல்வதைப்போல, சோனியாவின் சகோதரிகளுக்கும் இதில் பங்கு உள்ளதா என்ற கேள்வியில் புஸ் ஆகிக்கொண்டு இருக்கிறது ஸ்பெக்ட்ரம்!

காணாமல் போகும் காமன்வெல்த்! 

உலகம் முழுக்க நம் புகழ் பரப்ப நடத்தப் பட்ட காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி யால், இந்தியாவில் ஊழல் முறைகேடுகள் எந்த அளவுக்குத் தலை விரித்து ஆடுகின்றன என்பதை வெளிச்சப்படுத்திக்கொண்டோம். டெல்லியை அழகுபடுத்துவதில் ஆரம்பித்து, விளையாட்டு வீரர்கள் தங்கும் இடத்தின் கழிவறைகள் வரை எல்லாவற்றிலும் கரன்சியை அமுக்கினார்கள்.

இந்தப் போட்டிகளின் பொறுப்பாளராக இருந்த சுரேஷ்கல்மாடி முதல், டெல்லி மாநில முதல் அமைச்சர் ஷீலா தீட்சித் வரை அனைத்துமே காங்கிரஸ் தலைகள் பெயரே அடிபட்டது. ஒரு பாலம் கட்டுவதற்கு சுமார் 300 கோடி ஆகும் என்றால், இவர்கள் கணக்குப்படி ஒரு பாலத்தைச் சீரமைக்கவே 500 கோடி வரை செலவானது. விளையாட்டு வீரர்கள் பயன்படுத்தும் அத்தனை பொருட் களையும், அடக்க விலையைக் காட்டிலும், 60 முதல் 100 மடங்கு வரை அதிக வாடகைக்கு எடுத்தார்கள். எல்லாமே கமிஷன்... எங்கு திரும்பினாலும் பினாமிகள்... என்ற குற்றச் சாட்டுகள் காமன்வெல்த் போட்டி தொடங்கும் முன்பே வெளியில் வந்தன. அமைதி காத்த சோனியா, போட்டிகள் முடிந்த பிறகு சுரேஷ் கல்மாடி மீது நடவடிக்கை எடுத்தார். சிலர் கைதாகினர். ஆனால், கல்மாடி கைதாகவில்லை. அனைத்துக்கும் காரணமான அவர் காப்பாற்றப்பட்டார். இன்று வரை காங்கிரஸ் எம்.பி-யாகவே அவர் தொடர்கிறார். இத்தனைக்குப் பிறகும், 'நான் நிரபராதி’ என்று பேட்டிகள் தந்துகொண்டு இருக்கிறார்.

அவரை மட்டுமல்ல; அந்த வழக்கையே ஒன்றும் இல்லாமல் ஆக்குவதற்காகத் திரை மறைவுக் காரியங்கள் நடக்கின்றன. அதில் முக்கியமானது, காமன்வெல்த் தொடர்பான ஆவணங்களையே காணாமல் அடித்துவிட்டது!

ஊழல் நடந்ததை நிரூபிக்கத் தேவையான டெண்டர் கோருதல், பட்ஜெட் ஒதுக்கீடு, ஒப்பந்த விவரம் ஆகிய மூன்று ஆவணங்களையும் காணவில்லை. பிறகு, எதைவைத்து குற்றச்சாட்டை நிரூபிப்பார்கள்? 'அமெரிக்காவில் இருக்கும் தன்னுடைய உறவினர் வீட்டுக்கு இந்த ஆவணங்களை கல்மாடி அனுப்பிவைத்துவிட்டார்’ என்று பெயர், முகவரியுடன் டெல்லி பத்திரிகைகள் எழுதிய பிறகும் காங்கிரஸ் அமைதி காக்கிறது!

'தாமஸ் நல்லவர்!’ 

ஊழல் தடுப்புக் கண்காணிப்பு ஆணையம் எனப்படும் விஜிலென்ஸ் கமிஷனர்தான் இந்தியாவின் எந்தப் பாகத்திலும் எந்த முறைகேடும் நடக்காமல் கண்காணிக்க வேண்டிய பெரும் பொறுப்புகொண்டவர். அந்தத் துறை ஒழுங்காகச் செயல்பட்டு இருந்தால், நாட்டில் இந்த அளவுக்கு முறை கேடுகள் நடக்க வாய்ப்பே இல்லை. அந்த ஆணையத்தின் கமிஷனராக தாமஸ் என்பவரை நியமித்தபோது, நண்டைச் சுட்டு நரியைக் காவல்வைத்த கதைதான் நினைவுக்கு வந்தது. கேரள மாநிலத்தின் சிவில் சப்ளைஸ் கமிஷனராக இருந்தபோது, பாமாயில் இறக்குமதி தொடர்பாக இவர் மீது குற்றச் சாட்டு வந்தது. சிங்கப்பூரில் இருந்து பாமாயில் இறக்குமதி செய்ய கேரள அமைச்சரவை ஒப்புதல் தருவதற்கு ஒன்பது நாட்களுக்கு முன்ன தாகவே வெளிநாட்டு கம்பெனியில் இருந்து இவர் வாங்கிவிட்டதாக சந்தேக ரேகை படிந்தது. அது தொடர்பாக வழக்குப் பதியப்பட்டது. அப்படிப்பட்டவரை விஜிலென்ஸ் கமிஷனராக எப்படி நியமிக்கலாம் என்பதுதான் உச்ச நீதிமன்றம் எழுப்பிய கேள்வி.

இந்தப் பதவிக்கு வரக்கூடியவரை பிரதமர், உள்துறை அமைச்சர், நாடாளுமன்ற எதிர்க் கட்சித் தலைவர் ஆகிய மூவரும் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். எதிர்க் கட்சித் தலைவராக இருந்த சுஷ்மா ஸ்வராஜ், தாமஸின் நியமனத்தை எதிர்த்தார். ஆனாலும், மீறி நியமிக்கப்பட்டார் தாமஸ். உச்ச நீதிமன்றம் கேள்வி கேட்ட பிறகாவது, அவரை நீக்கி வேறு ஒருவரை நியமித்து இருக்கலாம். ஆனால், சோனியாவின் பாதுகாவலரான ஜார்ஜ் மூலமாகப் பதவியைப் பிடித்தவர் தாமஸ் என்பதால், அது நடக்காமல் போனது. 'தாமஸ் சிறந்த நிர்வாகி. இம்மாதிரியான பதவியில் நியமிக்கப்படுபவரின் தகுதிகள் குறித்து உச்ச நீதிமன்றம் கேள்விகள் கேட்க முடியாது!’ என்று மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது. ஓர் அரசாங்கத்தின் நியாய தர்மங்கள் எந்த அளவுக் குத் தரம் தாழ்ந்துகொண்டு இருக்கின்றன என்பதற்கு தாமஸ் நியமனம் ஒரு சாட்சி!

வீட்டை இடித்தால் மட்டும் போதுமா? 

நாட்டைக் காக்க உயிரைக் கொடுத்த தியாகி களின் வயிற்றில் அடித்த விவகாரம்தான் ஆதர்ஷ் வீடு ஒதுக்கீட்டு ஊழல்!

கார்கில் போரில் உயிர் இழந்த வீரர்களுக்கு மும்பை கொலபா கடற்கரையில் வீடுகள் கட்ட அனுமதி தரப்பட்டது. 31 வீடுகள் ராணுவ வீரர்களுக்கும், ஒன்பது வீடுகள் பொதுமக்களுக்கும் கட்ட அனுமதி தரப்பட்டது. ஆறு மாடிகளுக்கு மேல் கட்டக் கூடாது என்பது விதி. அதை மீறி, வீட்டு எண்ணிக்கையை 71 ஆக்கினார்கள். அதன் பிறகு 91 ஆகக் கூட்டினார்கள். 6 மாடிகளை 31 மாடி களாக உயர்த்தினார்கள். மகாராஷ்டிர காங்கிரஸ் அரசு இந்தக் காரியங்களைத் தடையில்லாமல் செய்துகொடுத்தது. அரசியல்வாதிகள், ராணுவ உயர் அதிகாரிகள், ராணுவத் தளபதிகளின் உறவினர்கள், காங்கிரஸ் முதல்வர் அசோக் சவானின் சொந்தங்கள் என்று உள்ளே புகுந்து வீடுகளைக் கைப்பற்றி னார்கள். கடற்கரை மேலாண்மை விதிகள் மீறப்பட்டதைவிட... தார்மீக நெறிமுறைகள் காற்றில் பறந்தன. பத்திரிகைகள் தொடர்ச்சியாக எழுதியதற்குப் பிறகு, அசோக் சவான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். விதிமுறைகளை மீறியது உண்மைதான் என்பதை உணர்ந்து, 31 மாடிக் கட்ட டத்தை முழுமையாக இடிக்க மத்திய அமைச்சர் ஜெயராம் ரமேஷ் உத்தரவிட்டு இருக்கிறார்.

'விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்ட கட்டடங்களை இடித்த பிறகு, அவ்வளவுதானே... இந்த விசாரணைகளை நிறுத்தி விட வேண்டியதுதானே?’ என்று காங்கிரஸ் தலைவர்கள் மெதுவாக முணு முணுக்கத் துவங்கி இருக்கிறார்கள்!

காப்பாற்றப்படும் கறுப்பு மனிதர்கள்! 

நேர்மையாளர் என்ற மன்மோகன் சிங்கின் முகத்திரை கறுப்புப் பணக் குவிப்பு விஷயத்தில் கிழிந்தது. மேற்கு ஐரோப்பிய நாடான வீக்டென்ஸ்டைன், வரி ஏய்ப்பாளர்களின் சொர்க்கம் என்று சொல்லப்படும். அங்கு இருக்கும் சுவிஸ், ஜெர்மன் நாட்டு நிறுவனங்கள் மற்றும் வங்கிகளில் யாரும் எவ்வளவு முதலீடும் செய்யலாம். அதற்கு கணக்குக் கேட்க மாட்டார்கள். அங்கு உள்ள எல்.டி.ஜி. வங்கியில் பணம் போட்டு உள்ளவர்களின் விவரங்களை ஜெர்மன் நாடு வாங்கி உள்ளது. அவர்களிடம் இருந்து நம்முடைய மத்திய அரசு பெற்றுள்ளது. அந்தத் தகவல்களை வெளியிட வேண்டும் என்று மூத்த வக்கீல் ராம் ஜெத்மலானி வழக்குப் போட்டார். 'நாட்டின் வளத்தைச் சூறை யாடிப் பதுக்கியவர்களின் பெயர்களை எப்படி மறைக்கலாம்?’ என்று கேட்கிறது நீதிமன்றம். 'பெயரை வெளியிட மாட்டோம் என்ற உத்தர வாதத்தின் அடிப்படையில்தான் வாங்கி இருக் கிறோம்!’ என்று மழுப்புகிறது மத்திய அரசு.

'வரி வசூல் செய்வதற்காகத்தான் இந்தப் பெயர்கள் வாங்கப்பட்டுள்ளன!’ என்று நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியிருக்கிறார். கறுப்புப் பணத்தைப் பதுக்கியவர்களை வெளியில் சொல்ல இவர்களால் முடியாது. ஏனென்றால், அந்த மனிதர் களின் தயவில்தான் காங்கிரஸ் கட்சியே இயங்கி வருகிறது என்று ராம் ஜெத்மலானி போன்றவர்கள் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.

போஃபர்ஸ் பீரங்கியும் இத்தாலி மாஃபியாவும்! 

ராஜீவ் படத்தை வரைந்து 'பீரங்கித் திருடன்’ என்று தி.மு.க. பிரசாரம் செய்த இந்த வழக்குக்கு வயது 20. ஆனால், வழக்கு இன்னும் முதல் படியைக்கூடத் தாண்டவில்லை. போஃபர்ஸ் பீரங்கி பேர ஊழல் வழக்கில் கமிஷன் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டார் இத்தாலி நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர் குவாத்ரோச்சி. இவர் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க ஆதாரம் இல்லை என்று சொல்லி, வழக்கை கடந்த மாதம் திரும்பப் பெற்றுக்கொண்டது சி.பி.ஐ.

இதைக் கேட்டதும் நீதிபதி வினோத் யாதவ் ஆடிப்போய்விட்டார். 'சி.பி.ஐ. இப்படிச் செய்வதற்குத் தவறான உள்நோக்கம் இருக்க வேண்டும்!’ என்றார். எந்தக் குற்றச்சாட்டுக்குப் பதில் சொல்ல முடியாமல் ராஜீவ் காந்தி இந்தியா முழுவதும் தேர்தலில் தோற்றாரோ... அந்த வழக்கு இன்று அநாதையாக நின்றுகொண்டு இருக்கிறது. அஜய் அகர்வால் என்ற ஒரு தனி மனிதர் மட்டுமே இதைப் பேசிக்கொண்டு இருக்கிறார்.



இந்த வழக்கை மறைக்கக் காரணம், ராஜீவ் மீதான குற்றச்சாட்டு மட்டும் அல்ல. சோனியாவுக்கு நெருக்கமானவர் குவாத்ரோச்சி என்பதும் ஓர் அடிப்படைக் காரணம். 'ஆதாரம் இல்லை’ என்று சி.பி.ஐ. சொல்வதும் இதனால்தான்.



ஒரு காலத்தில் இத்தாலிதான் மாஃபியாக்களின் தலைமையிடம் என்பார்கள். சமீப கால இந்திய நிகழ்வுகள் அதை உண்மை என்று நம்பத் தூண்டுகிறது!



நன்றி ஆனந்த விகடன்

Monday, January 24, 2011

கருணாநிதி : சிறந்த ஒட்டு வங்கி அரசியல்வாதி

Comments from one of the dinamalar article
****************************************
நான் எனது விடுமுறை காலத்தில் எனது இரண்டு சக்கர வாகனத்தில் வேலூரில் இருந்து உதகமண்டலம் வரை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், கோயம்புத்தூர், மேட்டுபாளையம் வழியாக சென்றேன், நான் சென்ற இடங்களில் சந்தித்த மனிதர்களிடம் சின்ன கருத்து கணிப்பு நடத்தினேன், மருந்து கடை, பெட்ரோல் பங்க், ஹோட்டல், காய் கரிமார்க்கெட், பேங்க், டீ கடை, பல சரக்கு மளிகை கடை போன்ற இடங்களில் உள்ள மக்களிடம், இன்னும் தேர்தல் வர மூன்று மாதம் தான் உள்ளது, இந்த முறை யார் வர வேண்டும் என்று நினைக்கிறீர்கள் என்று கேட்டேன், 210 பேர் அதிமுக வர வேண்டும் என்றனர். அந்த 212 பேரில் சிலர் எல்லாரும் தான் ஊழல் செய்கிறார்கள், ஆனால் திமுக யாருமே இது வரை செய்யாத ஊழலை செய்துள்ளது, சட்டம் ஒழுங்கு, விலைவாசி பிரச்சனைக்காகவே கட்டாயம் அதிமுக வந்தாகவேண்டும் என்று கூறினர், வெறும் 38 பேர் தான் திமுக வரவேண்டும் என்றனர். 


இதிலிருந்து என்ன தெரிகிறது, ஆட்சி மாற்றம் நிச்சயம். இந்த ஆட்சியில் மாநில வளர்ச்சி திட்டம் என்ற ஒன்றே இல்லை. இலவசங்கள் தான் வளர்ச்சி திட்டம் இல்லை, ஒரு மாநிலத்திற்கு முக்கியம் சட்டம் ஒழுங்க கட்டுக்குள் வைப்பது, குடிநீர் பஞ்சம் இல்லாமல் பார்த்துகொள்வது, தங்கு தடையின்றி மின்சாரம் வழங்குவது, தரமான சாலைகள் போடுவது, சுகாதாரத்தை பேணி காப்பது, தராமான கல்வி கொடுப்பது, வேலை வாய்ப்பை அதிகபடுதுவது, சுயல் தொழில் செய்ய இளைஞர்களை ஊக்குவிப்பது, காடுகளை பாதுகாப்பது, நல்ல பேருந்து வசதி செய்து கொடுப்பது, மக்களின் ஏழ்மை நிலைமையை போக்குவது போன்றவை தான் வளர்ச்சி, நல திட்டங்கள். 


நாம் மஞ்சள் துண்டை குறை கூறி பிரயோஜனம் இல்லை, ஏன் என்றால், வளர்ச்சி திட்டம் என்பது அறிவுடனும், விவேகத்துடனும் யோசித்து போடுவது, மஞ்சள் துண்டு, அவரின் அறிவு சக்திக்கு அப்பால் அவரால் யோசிக்க முடியாது, யோசிக்கவும் தெரியாது, அவரின் அறிவுக்கு தகுந்தது, இலவசங்கள் மட்டும் தான் கொடுக்க முடியும் 


கருணாநிதிக்கு இன்னொரு பெயர் வைத்தால் நன்றாக இருக்கும், "சிறந்த ஒட்டு வங்கி அரசியல்வாதி". யார் ஒருவர் ஒட்டு வங்கியை மனதில் வைத்தே அரசியல் நடத்துகிறாரோ, அவரால் சிறந்த நிர்வாகத்தை கொடுக்க முடியாது. மத மாற்ற தடை சட்டம் கொண்டு வந்தால் சிறுபான்மையினர் வோட்டு கிடைக்காது என்று தெரிந்தும் ஜெயலலிதா மக்கள் நலனுக்காக ஹிந்து மதத்தை காப்பாற்ற அந்த சட்டத்தை கொண்டு வந்தார், இந்த துணிச்சல் கருணாநிதிக்கு உள்ளதா? அரசு ஊழியர்களை வேலை விட்டு அனுப்பினால் அவர்களின் ஒட்டு கிடைக்காது என்று தெரியும், இருந்தாலும் வேலை செய்யாமல் வெறும் கையெழுத்து மட்டும் போட்டுவிட்டு சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்களை மிரட்டி, இனிமேல் இப்படி தான் ஒழுங்காக வேலை செய்ய வேண்டும் என்று ஒரு வழிக்கு கொண்டுவந்தார், ஊதாரிதனாமாக வேலை செய்யாதவனுக்கு சம்பளத்தை வாரி வாரி வழங்கவில்லை, அரசு ஊழியர்கள் திமுக ஆட்சி வந்தாலே குஷியாகிவிடுவார்கள், ஏன் என்றால் வேலையே செய்யாமல் சம்பளம் வாங்கலாமே, சிறந்த நிர்வாகம் என்பது,கடன் வாங்காமல், ஆட்சி முடியும் போது அரசு கஜானாவில் எவ்வளவு பணம் கையிருப்பு உள்ளதோ அதை வைத்தே சொல்லிவிடலாம் ஆனால் இங்கோ 


ஒரு லட்சம் கோடி ரூபாய் கடன் உள்ளது, கடன் வாங்கியாவது மாநிலம் வளர்ந்திருந்தால் மகிழ்ச்சியடையலாம், கடன் வாங்கி இலவசங்கள் வழங்கபட்டுள்ளது..


2006 ஆண்டு கடைசி சட்டசபை கூட்ட தொடரில் கடன் இல்லாமல், பத்து ஆயிரம் கோடி ரூபாய் அரசு கஜானாவில் இருப்பு வைத்துள்ளதாக ஜெயலலிதா அறிக்கை சமர்பித்தார், அது நிர்வாக திறமை. இந்த குடும்ப அரசியல் மற்றும் வோட்டு வங்கி அரசியல் நடத்துபவர்களால் சிறந்த நிர்வாகத்தை கொடுக்கவே முடியாது. 


ஜெயலலிதா என்றாலே எல்லாரும் ஆணவம், திமிர் என்று கூறுகிறார்கள், உண்மையில் அது ஆணவம் அல்ல, கண்டிப்பு, தைரியம், அதனால் தான் MGR சாவுக்கு பிறகு கட்சியை காப்பாற்ற முடிந்தது, இல்லை மஞ்சள் துண்டு எப்பவோ அழித்திருப்பார். அம்மாவுக்கு இருக்கும் தைரியம், யாரை வேண்டுமானாலும் எதிர்க்கும் தைரியம் கருணாநிதிக்கு வரவே வராது. 


ஜெயலலிதவுக்கு வாரிசுகள் இல்லை, அவர் ஊழல் செய்தாலும் கடைசியில் MGR சொத்துக்களை போல மக்களுக்கே திரும்ப வரும், அந்த பணம் இந்தியாவிலே தான் இருக்கும், ஆனால் மஞ்சள் துண்டு ஊழல் பணம் மக்களுக்கு வருமா? நினைத்து பாருங்கள். அம்மா நீங்கள் ஆட்சியை பிடித்தவுடன், முதலில் இந்த இலவசங்களை நிறுத்த வேண்டும், அதற்க்கு பதிலாக மாநிலத்தை 

Saturday, January 15, 2011

விலைவாசி உயர்வு பற்றி நம்மை ஆள்பவர்களின் கருத்து

விலைவாசி உயர்வு பற்றி நம்மை ஆள்பவர்களின் கருத்து: 


முதல்வர் கருணாநிதி: வெங்காயம் விலை ஏறினால் பெரியாரை போய் கேளுங்கள். 
துணை முதல்வர் ஸ்டாலின்: இது உலக பிரச்சணை. அமைச்சர் அன்பழகன்: என் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்து கொள்ளுகிறேன். அமைச்சர் பொன்முடி: மக்களிடம் வாங்கும் சக்தி அதிகரித்து விட்டது (ஒரு வேளை இடைத்தேர்தல் நடந்த தொகுதிகளின் மக்களை குறிக்கிறாரோ?) அமைச்சர் வேலு: அதிமுக ஆட்சியிலும் விலைவாசி உயர்ந்தது