Dinamalar Article ( மே 22,2010,23:50 IST)
*************************************************
ஓட்டு வங்கி அரசியல் என்ற நிலையில் இருந்து ஜனநாயகம் விடுபடாத வரை, பொதுமக்களுக்கு முழுமையான அளவில் நன்மை செய்கிற அரசுகள் அமைவது மிகவும் கடினம் என்ற உண்மையை பறைசாற்றும் வகையில், தமிழக அரசின் நிதி செயல்பாடுகள் மீதான மத்திய கணக் காய்வு மற்றும் தணிக்கைத் துறை தலைவரின் அறிக்கை அமைந் துள்ளது. குறிப்பாக, மின்துறை, போக்குவரத்து, சர்க்கரை ஆலைகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் மிகவும் மோசமாக அமைந்துள்ளதும், அரசின் வருவாயில் பெரும்பகுதி அரசு ஊழியர்களின் ஊதியத் திற்கும், நிர்வாக செலவுகளுக்குமே செல்வதும் தெரியவந்துள்ளது.
கடந்த 2009 மார்ச் மாதத்துடன் முடிந்த ஆண்டிற்கான நிதிக் கணக்குகள் மற்றும் நிதி ஒதுக்கீடுகளை ஆய்வு செய்த இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத்துறை, அரசு நிர்வாகம், நிதி பயன்பாடுகளிலும், ஒதுக்கீடுகளிலும், திட்டமிடுவதிலும் எந்தளவிற்கு அலட்சியமாக இருந்துள்ளது என் கிற அதிர்ச்சி தகவல்களை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மாநில அரசுகளின் நிர்வாக செலவின ஒதுக்கீடுகளை தணிக்கை செய்து ஆய்வுக்கு சமர்ப்பிக்கும் பணியை மத்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத்துறை செய்து வருகிறது. இதன் மூலம் அந்தந்த மாநிலங் களின் தேவை, அங்குள்ள பொதுத் துறை நிறுவனங்களின் செயல் பாடு, அரசின் செயல்பாடு, செலவினங்கள், திட்டமிடுதல், திட்டம் சாரா செலவினங்கள், திருப்பியளிக்கப்பட்ட நிதி ஆகியவை குறித்து தெரிந்து கொள்ள முடியும். இந்த தணிக்கை அறிக்கைகள், குறிப்பிட்ட ஆண்டிற்கு அடுத்த ஆண்டே தெரிய வரும். இந்த அறிக்கைகள், பட்ஜெட் கூட்டத் தொடரின் போது சமர்ப்பிக்கப் படும்.
இது போன்ற மத்திய தணிக்கைத் துறையின் அறிக்கை இந்த ஆண்டு, சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட்டது. இதில், பொருளாதார வல்லுனர் களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் பல்வேறு தகவல்கள் இடம் பெற்றுள்ளன. இந்த அறிக்கை மூன்று அத்தியாயங்களை கொண் டுள்ளது. நிதி நிலை ஒழுக்க முறை; திட்டம் சாரா செலவினத்தை குறைக்க வேண்டியதன் தேவை; அரசு முதலீடுகளின் மீதான ஆய்வு; திட்டங்களை முடிப்பதில் காலதாமதம்; அதிகபட்ச கடன் வரையறை; நிதி மேலாண்மை மற்றும் பட்ஜெட் திட்ட கட்டுப்பாடு உள் ளிட்ட பல்வேறு தகவல்கள் இதில் இடம் பெற்றுள்ளன. திட்டம் சாரா செலவுகளையும், வருவாய் தராத செலவினங்களையும் தவிர்க்க தமிழக அரசு, சரியான நடவடிக்கை எதுவும் மேற் கொள்ளவில்லை என்பதை, அறிக் கையின் மூலம் அறிய முடிகிறது. அது போல், கடன் நிலை; வரவு - செலவு திட்டம் சாரா கடன் பொறுப்புகள்; ரொக்க கையிருப்பு மேலாண்மை போன்றவைகளும் சரி வர கையாளப்படவில்லை.
கடந்த 2005 - 06ம் ஆண்டில், தமிழகத்தில் மிகை வருவாய் இருந்தது. இதை தக்க வைக்கும் நடவடிக்கைகளில் தமிழக அரசு இறங்கவில்லை. மாறாக, சமூக, பொருளாதாரப் பணிகளுக்காக அதிக நிதி ஒதுக்கி வீணடித்ததுடன், வருவாய் வரவினங்களில் கவனம் செலுத்தாமலும் அரசு கோட்டை விட்டுள்ளது. குறிப்பாக, மொத்த செலவினத் தில் திட்டம் சாரா செலவினம் மட்டும் 80.33 சதவீதமாக இருந்தது. இதில், சம்பளங்கள், ஓய்வூதியம், வட்டி செலுத்துதல், ஊக்க உதவிகளுக்காக மட்டும் அரசு ஒதுக்கியது 78.44 சதவீதம். அரசு கழகங்கள், ஊரக வங்கிகள், கூட்டு பங்கு நிறுவனங்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் ஆகியவற்றில் அரசு செய்திருந்த முதலீட்டிலிருந்து கடந்த மூன்றாண்டுகளாக அரை சதவீத வருமானமே கிடைத்துள்ளது. அதே சமயம், அரசு பெற்ற கடன்களுக்காக 8.4 சதவீத வட்டி செலுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் அரசு, தனது முதலீடுகளில் இருந்து அதிகப்படியான வருவாயை பெறுவதற்கான நடவடிக்கைகளில் கவனம் செலுத்தவில்லை என்பது தெளிவாகியுள்ளது. நிதித் தேவை அதிகரித்து வரும் நிலையில், அரசு வழங்கியுள்ள கடன்கள், முன் தொகைகள், அதற்கான வட்டி பெறும் வீதம் குறைந்து வருவது ஆகியவை, அரசின் கடன் சுமையை தாங்க இயலாத நிலைக்கு இட்டு செல்லும். திட்டம் சாரா செலவினத்தை அரசு குறைத்தே தீர வேண்டும்; வரி மற்றும் வரியல்லாத ஆதாரங் களில் இருந்து கூடுதல் நிதியை திரட்டியே ஆக வேண்டிய கட்டாயத்தில் தமிழக அரசு உள்ளது. ஆனால், அதற்கு மாறாக, தமிழக அரசு வருவாய் அல்லாத செலவினங்களை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. இது நிச்சயம் வரும் காலங்களில் தமிழகத்தின் பொருளாதார நிலையை வெகுவாக பாதிக்கும் நிலைக்கு கொண்டு செல்லும்.
வருவாய் வரவினங்களில் தமிழக அரசு எப்படி கவனம் செலுத்த தவறியதோ, அதுபோல் திட்டங்களை முடிப்பதிலும் கவனம் செலுத்த தவறியதாக, அறிக்கையில் குறிப்பிடப்பட் டுள்ளது. குறிப்பாக, பாசன திட்டங்களை முடிப்பதில் அளவு கடந்த தாமதத்தினால் பெருமளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கால விரயத்தை தடுக்கவும், திட்டமிடுவதை விட கூடுதல் செலவு ஏற்படாமல் தவிர்க்கவும், பணிகளை முறையாக திட்டமிட்டு குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க வேண்டும். இதில் அரசு அதிக கவனம் செலுத்த வேண்டும். வரவு - செலவு திட்டத்தில் கட்டுப் பாடு இல்லாத தன்மை தமிழக அரசிடம் அதிகம் காணப்படுகிறது. பல திட்டங்களில், ஒதுக்கப் பட்ட நிதி சரியாக செலவிடப் படாமல் திருப்பி ஒப்படைக்கப் பட்டுள்ளது. சில திட்டங்களில் ஒதுக்கப்பட்ட நிதி செலவிடப் படவும் இல்லை. திருப்பிச் செலுத்தப்படவும் இல்லை.
கடந்த 2008- 09ம் ஆண்டில் செலவினங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகையில், 7,311 கோடியே 45 லட்சம் ரூபாய் மீதமாகியது. அப்போது, 153 கோடியே 65 லட்சம் ரூபாய் மிகை செலவினம் சரிகட்டப்பட்டிருந்தது. அரசின் உதவி மானியங்கள் பெறும் 228 தன்னாட்சி நிறுவன அமைப்புகள், குழுமங்கள் தங்களது ஆண்டு கணக்குகளை சமர்ப்பிப்பதில் காலம் தாழ்த்தினர். இதை அரசு கண்டு கொள்ளவில்லை. அதே போல், அரசு பணம் 9.47 கோடி ரூபாய் உள்ளடங்கிய கையாடல்கள், திருட்டு, இழப்புகள் போன்ற 503 சம்பவங்களை நிதி ஆண்டு முடியும் வரை அரசு தெரிவித்து வந்தது. இவற்றின் மீது முறையான இறுதி நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. நிதி நிர்வாகம் நன்றாக இருக்க வேண்டுமென்றால், இது போன்ற எல்லாவிதமான கையாடல்கள் மீதும் துறை ரீதியான விசாரணைகளை விரைவாக முடித்து, குற்ற வாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். மேலும், இது போன்ற நிகழ்வுகள் பிற்காலத்தில் ஏற்படாமல் தடுக்க, உள் கட்டுப்பாட்டு முறைகளை எல்லாத்துறைகளிலும் வலுப் படுத்த வேண்டும். இதிலும் தமிழக அரசு அதிக அக்கறை செலுத்தவில்லை. இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 293(3)ன் கீழ், வரவு - செலவு திட்டம் சாரா கடன்களை பெறுவதற்கு தடை செய்யப்பட் டுள்ளது. ஆனால், தமிழக அரசு இதை கண்டு கொள்ளாமல், வரவு - செலவு திட்டம் சாராத கடன்களை தொடர்ந்து பெற்று வருகிறது. இது மாநிலத்தின் நிதிப் பொறுப்புகளை அதிகப்படுத்தி வருவதுடன், தேவையற்ற நிதி சுமையையும் ஏற்படுத்தி வருகிறது.
அரசின் வருவாய் வரவினம் 16 சதவீதமாகவும், வருவாய் செலவினம் 25 சதவீதமாகவும் ஒன்றுக்கு ஒன்று சற்றும் தொடர்பில்லாமல் உள்ளது. அதாவது வருவாயை விட அரசின் செலவு மிக அதிகமாக உள்ளது. இதற்கு அரசு ஊழியர் ஊதிய உயர்வு, ஓய்வூதியம், ஊக்க உதவிகளே பெருமளவு காரணமாக அமைந்துள்ளது. வரவு - செலவு திட்டத்தை அரசு சரியாக முறைப்படுத்தவில்லை என்பதை பட்டவர்த்தனமாக காட்டும் வகையில், பதிமூன்று பணிகளில் ஒப்படைக்கப்பட்ட நிதியானது, எவ்வளவு நிதி மீதம் இருந்திருக்க வேண்டுமோ அதை விட அதிகமாக இருந்தது. அதாவது, 1,192 கோடியே 46 லட்சம் ரூபாய் தான் மீதம் இருக்க வேண்டும். ஆனால் 1,286 கோடியே 77 லட்சம் ரூபாய் திரும்ப ஒப்படைப்பு செய்யப் பட்டிருந்தது. தேசிய ஊரக நலவாழ்வு இயக்கம்: தேசிய ஊரக நல வாழ்வு இயக்கம், மத்திய அரசால், கடந்த 2005ம் ஆண்டு ஏப்ரல் மாதம் துவக்கப் பட்டது. கிராமப்புற மக்களின் சுகாதார மேம்பாட்டிற்காக இந்த திட்டம் துவக்கப்பட்டது. குறைந்த செலவில், பாரபட்சமற்ற முறையில் தரமான நல வாழ்வு வசதிகள் கிடைக்க வழி வகை செய்ய, இந்த இயக்கத்தின் சார்பில் பல்வேறு பணிகள் மேற் கொள்ளப்பட்டன.
தமிழகத்தில் இந்த இயக் கத்தின் கீழ் நடைபெறும் பணிகளை மத்திய தணிக்கை துறை ஆய்வு செய்த போது பல்வேறு உண்மை நிலவரங்கள் தெரிய வந்தன. குறிப்பாக, இயக்கத்தின் தொலைநோக்குத் திட்டங்கள், மாவட்ட, வட்டார மற்றும் கிராம ஆண்டு திட்டங்கள் முறைப்படி தயாரிக்கப் படவில்லை. தணிக்கை நடந்த ஏழு மாவட் டங்களில், அவசர, பேறு கால, சிசு கவனிப்பு வசதிகள் போன்றவைகளுக்காக தரப்பட்ட 62 கோடி ரூபாய் செலவிடப்படவில்லை. கடந்த 2006-09ம் ஆண்டுகளில், தேசிய ஊரக நலவாழ்வு இயக்கத்திற் கான 53 கோடியே 95 லட்சம் ரூபாய், வேறு திட்டங் களுக்கு மாற்றப்பட்டது. வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், சுகாதார துணை நிலையங்கள் அவற்றிற்கான நிர்ணயத்தின் படி போதுமான ஊழியர் கள் இல்லை. பல வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களில் ரத்த சேமிப்பு வசதி இல்லை. பல இடங்களில் அவசர கால, விபத்து சிகிச்சைக் கான அறைகள் இல்லை. பல இடங்களில் அறுவை சிகிச்சை அறைகள் இல்லை. திட்ட மேலாண்மை பிரிவுகளுக்குத் தேவைப்படும் 1,242 பணியாளர் களுக்கு பதில் 52 பணியாளர்கள் மட்டுமே பணியமர்த்தப்பட்டுள் ளனர். அதை விட பெரிய கொடுமையாக 2005 -09ம் ஆண்டுகளில், 3 லட்சத்து 53 ஆயிரத்து 575 குழந்தைகளில், ஒரு லட்சத்து 89 ஆயிரத்து 695 குழந்தைகளுக்கு, மூக்குக் கண்ணாடிகள் வழங்கப் படவில்லை.
விரிவான தரிசு நில மேம்பாட்டுத் திட்டம்: தமிழகத்தில் தரிசு நில மேம் பாட்டு திட்டம் கடந்த 2001ம் ஆண்டு துவங்கப்பட்டது. இதற் கான தணிக்கை அறிக்கையில், வருவாய் துறையின் தரிசு நில பதிவேடுகளின் தவறுகளையும், பல் வேறு முகமைகளுக்கிடையே திட்ட மிடுதல், ஒருங்கிணைப்பு, நிதி மேலாண்மை மற்றும் கண்காணித்தல் ஆகியவற்றில் உள்ள குறைபாடுகளை வெளிப்படுத் தியுள்ளது. திட்ட நடைமுறைப் படுத்தலின் முன்னேற்றத்தை மதிப்பிடாமல், நிதிகள் விடுவிக்கப்பட்டதால், 53 கோடியே 80 லட்சம் ரூபாய் வீணாக வங்கியில் முடங்கி கிடந்தது. இத்திட்டத்தில் நிறுவனங் களுக்கு குத்தகைக்கு விடப்பட்ட 272 எக்டேர் அரசு நிலம் பயிரிடப்படவே இல்லை. அவை திரும்ப பெறப்படவும் இல்லை.
நில ஆவணங்களை கணினி மயமாக்குதல்: பயனுள்ள நில சீர் திருத்தத்தை உறுதிபடுத்தவும், பொதுமக்களுக்கு மேம்பட்ட சேவை செய்யவும், மத்திய அரசு உதவியுடன், தமிழகத்தில், "நில ஆவணங்களை கணினி மயமாக்கும் திட்டம்' கடந்த 88-89ம் ஆண்டில் துவங்கப்பட்டது. திட்டம் துவங்கி 20 ஆண்டுகள் ஆன பின்னும் நில ஆவணங்கள் இன்னும் முழுமையாக கணினிமயமாக்கப்படாத நிலையிலேயே உள்ளது. கடந்த 2000-08 வரையில் மத்திய அரசு அளித்த நிதியில் 9 கோடியே 94 லட்சம் ரூபாய், தமிழ்நாடு மின்னணு நிறுவனத் திடம் பயன்படுத்தப்படாமல் இருந்தது. தேவையான சாப்ட்வேர் இல்லாததால், 8 கோடியே 21 லட்ச ரூபாய் செலவில் வாங்கப் பட்ட கணினி பொருட்கள் வீணடிக்கப்பட்டிருந்தன.
நட்டத்தை சந்தித்து வரும் போக்குவரத்து கழகங்கள்: தமிழகத்தில் மொத்தம் ஏழு போக்குவரத்து கழகங்கள் உள்ளன. இவற்றில், 2009ம் ஆண்டு மார்ச் மாதம் வரை 20 ஆயிரத்து 104 பஸ்கள் இருந்தன. இதில் ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 700 பேர் பணிபுரிந்தனர். அரசு பஸ்களில், சராசரியாக தினமும் ஒரு கோடியே 96 லட்சத்து 96 ஆயிரம் பேர் பயணித்தனர். ஏழு போக்குவரத்து கழகங்களும் சேர்த்து 2008-09ம் ஆண்டில் மொத்தம் 5,050 கோடியே 63 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டின. இது மாநிலத்தின் மொத்த உற் பத்தியில் 2.21 சதவீதம். இதில் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம், 99.5 சதவீதம் ஆதாயமற்ற தடத்திலேயே பஸ்களை இயக்குகிறது. இந்த போக்குவரத்து கழகத்திற்கு 95 கோடியே 74 லட்சம் ரூபாய் நட்டம் ஏற்பட்டது. மினி பஸ்கள், ஷேர் ஆட்டோக்களால், மதுரை போக்குவரத்துக் கழகம் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. அந்த போக்குவரத்துக் கழகம் 182 கோடி ரூபாய் நஷ்டம் அடைந்தது. வழித் தடங்களை ஆய்வு செய் யாமல் மாற்றியதால், மதுரைக்கு 10 கோடியே 67 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டது. மதுரை, கும்பகோணம் போக்குவரத்து கழகங்கள் உழவர் சந்தைகளுக்கு சிறப்பு சேவைகளை இயக்கியதால், ஆறரை கோடி ரூபாய் நட்டம். பஸ் மற்றும் பயணிகள் இல்லாததால் அரசு போக்குவரத்துக் கழகத் திற்கு 169 கோடியே 17 லட்சம் ரூபாய் நட்டம் ஏற்பட்டது.
அரசு போக்குவரத்து கழகங்களில் பணியாளர் களுக்கும், எரிபொருளுக்கும் மட்டும் 78.49 சதவீதம் அளவு தொகை செலவிடப்படுகிறது. அதிகப்படியான பணியாளர்கள் காரணமாக சென்னை, மதுரை, கும்பகோணம், விரைவு போக்குவரத்து கழகங்களில் மட்டும் 542 கோடியே 38 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. அனைத்து போக்குவரத்து கழகங்களிலும் தேவைக்கு அதிகமான பணியாளர்கள் பணியில் உள்ளனர். இப்படி பல்வேறு பிரிவுகளிலும் போக்குவரத்துக் கழகம் நட்டத்தை சந்தித்து வருகிறது.
தமிழக கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் ஏற்பட்ட நஷ்டம்: கூட்டுறவு சர்க்கரை ஆலைகள், தமிழகத்தின் ஊரகப் பகுதிகளின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. கரும்பு உற்பத்தி செய்யும் நான்கு லட்சத்து 23 ஆயிரம் விவசாயிகளின் வாழ்வாதாரம் அந்த ஆலைகளை சார்ந்திருக்கிறது. தமிழகத்தில் மொத்தம் 15 கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் இருக்கின்றன. இதற்கென தனியே கமிஷனர் நியமிக்கப்பட்டு, அவரது கட்டுப் பாட்டில், ஆலைகளை ஒழுங்குமுறைப்படுத்தல், கண்காணித்தல், மேற்பார்வையிடுதல், அரசு திட்டங்களை நடைமுறைப்படுத்துதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப் படுகின்றன. கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் செயல்பாடுகள் குறித்து 2004-05லிருந்து 2008-09க்கு உட் பட்ட காலத் திற்கான தணிக்கை அறிக்கை, அவற்றின் செயல்பாடுகளை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. இவற்றின் மொத்த இழப்பு 1,475 கோடி ரூபாய்.
தொழில்துறைக்கான ஒதுக்கீட்டை முழுவதும் செலவு செய்யாத அவலம்: தமிழக அரசின் மொத்த நிதி ஒதுக்கீட்டில், 20 சதவீதத்திற்கு அதிகமாக உள்ள பணிகளில் வருவாய் ஒதுக்கீடுகளில் நிறைய பணம் மீதமாகியுள்ளது. கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளத் துறைக்கு ஒதுக்கீடு 111 கோடியே 22 லட்சம் ரூபாய். செலவானது 74 கோடியே 53 லட்சம் ரூபாய். மீதி 36 கோடியே 69 லட்சம் ரூபாய் செலவு செய்யவில்லை. நிதித்துறைக்கு ஒதுக்கீடு 528 கோடியே 57 லட்சம் ரூபாய். செலவானது 403 கோடியே 72 லட்சம் ரூபாய். 124 கோடியே 85 லட்சம் செலவு செய்யவில்லை. உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வை துறைக்கான ஒதுக்கீடு, செலவுகளும் அப்படித்தான் இருக்கின்றன. தொழில் துறைக்கு ஒதுக்கீடு 349 கோடியே 29 லட்சம் ரூபாய். செலவானது 188 கோடியே நான்கு லட்சம் ரூபாய். குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறைக்கு ஒதுக்கீடு 94 கோடியே நான்கு லட்சம் ரூபாய்; செலவு 51 கோடியே மூன்று லட்சம் ரூபாய். மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை, பிற்படுத்தப்பட் டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை உட்பட பல துறைகளிலும் இதே நிலை தான் உள்ளன. பொதுப்பணித்துறை நீர்ப்பாசன பிரிவிற்கு ஒதுக்கீடு 1,062 கோடியே ஏழு லட்சம் ரூபாய். செலவானது 515 கோடியே 88 லட்சம் ரூபாய் மட்டும் தான். பள்ளிக் கல்வித்துறை, பால் வளத் துறைக்கு ஒதுக்கப்பட்ட முழு நிதியும் செலவு செய்யப்படவில்லை.
எந்த திட்டமும் இல்லாமல் வெட்டிச் செலவு
* வீட்டு வரி, சொத்து வரி, தொழில் வரி, வருமான வரி, விற்பனை வரி என்ற பல பெயர்களில் மக்களிடம் இருந்து மத்திய, மாநில அரசுகள் வருவாயைப் பெறுகின்றன. இதன் மூலம் பெறப்படும் வருமானத்தை முறையாக மக்கள் நலத்திட்டங்களுக்கு செலவிடுகிறதா என்றால் இல்லை என்றே பதில் வருகிறது.
* கலர் "டிவி'க்கு மட்டும் நான்கு ஆண்டுகளில் 3000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* இலவச மின்சாரத்திற்காக ஆண்டுக்கு 1500 கோடி ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது
* டீசல் விலை உயர்வுக்கு ஏற்ப பஸ் கட்டணங்களை உயர்த்தாமல், பஸ் போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு மானியமாக ஒவ்வொரு ஆண்டும் ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு வாரி வழங்குகிறது.
* உணவு மானியமாக ஆண்டுக்கு 3000 கோடி ரூபாய் வரை அரசு வழங்குகிறது.
* கூட்டுறவு சர்க்கரை ஆலைகள், வீ.வ.வாரியம், குடிசை மாற்று வாரியம், டிட்கோ, டான்சி, சிட்கோ எனப்படும் பல வகை அரசு நிறுவனங்கள் எல்லாமே நஷ்டத்தில் தான் இயங்குகின்றன. இவற்றிற்கு, மானியங்களை அரசு வாரி வழங்குவதால், மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்பட்டிருக்கிறதா என்றால் இல்லை. புதிய மின் நிலையங்களை அமைக்க தனியாரிடமும், உலக வங்கியிடமும் கையேந்தி நிற்க வேண்டிய நிலையில் உள்ளது. இலவச "டிவி'க்கு வழங்கிய 3000 கோடி ரூபாயை மின் நிலையம் அமைக்க ஒதுக்கியிருந்தால் தமிழகத்தில் இன்று மின் வெட்டே இருந்திருக்காது.
கடந்த பல ஆண்டுகளாக தமிழகத்தில் மிகப்பெரிய அணைக்கட்டோ, அனல் மின் நிலையங்களோ துவங்கப்படவே இல்லை. பஸ் போக்குவரத்துக் கழகங்களை அரசே நடத்த வேண்டுமா? தமிழக அரசுக்கு மிகப்பெரும் சுமையாக இருப்பது அரசு பஸ் போக்குவரத்துக் கழகங்கள் தான். அரசு, நிர்வாகம் செய்வதை விட்டு விட்டு வர்த்தகம் செய்வதால் தான் மிகப்பெரும் பிரச்னைகள் ஏற்படுகின்றன. கட்டணம் நிர்ணயம், பஸ்கள் ஒழுங்காக இயக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்கும் பொறுப்பை மட்டும் அரசு வைத்துக் கொண்டு பஸ்களை தனியாரிடமோ, கூட்டுறவு அமைப்புகளிடமோ விட்டு விடலாம். அரசு போக்குவரத்து ஊழியர்களிடமே, குறிப்பாக 10 ஊழியர்களுக்கு ஒரு பஸ் என்ற முறையில் பிரித்து கொடுத்து தொழிலாளர்களை நிர்வாகிகளாக மாற்றி விடலாம். தனியாருக்கு இணையாக அவர்களும் பஸ்களை இயக்குவர். லாபத்தை அவர்களே பிரித்து எடுத்துக் கொள்ளலாம். இதன் மூலம் அரசுக்கு சுமையும் குறையும். தொழிலாளர்களிடம் இருந்து எதிர்ப்பும் வராது.
No comments:
Post a Comment